வியாழன், ஜூன் 11, 2009

ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

மனித உடலில் சில சில்லுகளைப் பொறுத்தி, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னேரமும் விண்ணில் உள்ள துணைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்க முடியுமா என்று ஒரு அமெரிக்க நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.


அப்ளைடு டிஜிட்டல் சொலுஷன்ஸ் என்ற இந்த நிறுவனம், இந்த கணினிச்சில்லுகளை வெரிசிப்ஸ் என்று அழைக்கிறது. இந்த சில்லுகள் உடலில் தோலுக்கு அடியில் பொறுத்த இயலும்.


ஜிபிஎஸ் என்னும் உலகத்தில் ஒரு பொருள் எங்கிருக்கிறது என்பதை அறிய உதவும் துணைக்கோள் தொழில்நுட்பத்தை இதற்கு உபயோகப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே பலர் கோரிவருகிறார்கள்.


தென் அமெரிக்காவில் ஏராளமாக நடக்கும் ஆள்கடத்தல்களால் இந்த தொழில்நுட்பத்துக்கு தேவை பெருகி வருகிறது.


இந்த வெரிசிப் இன்னும் கடைகளில் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்க அரசாங்கம் இதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை.


இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுவிட்டால், இதனை கொண்டு ஒரு ஆள் எங்கே போகிறார் எங்கே வருகிறார் என்பதை அரசாங்கமோ நிறுவனங்களோ கண்காணிக்க எந்த வித தடையும் இராது என்று எதிர்கால கணிப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்.


உடலும் தொழில்நுட்பமும் இணைவது நல்லதல்ல என்று பலர் அஞ்சுகிறார்கள். பிரைவசி இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் அதலிவரான சிமோன் டேவிஸ் இது மகிழ்ச்சியானதல்ல என்று கூறுகிறார்.


ஏற்கெனவே பல உடல் சார்ந்த சில்லுகள் சந்தைக்கு வந்துவிட்டன. ரத்தத்தின் வேதிப்பொருட்களை கணக்கிடும் சில்லு, எந்த வேதிப்பொருள் குறைகிறது என்று ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல மருந்தை தானாக அனுப்புமாறு சில சில்லுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. (உதாரணமாக, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு குளுக்கோஸ் பரிசோதனைச் சில்லு). இதே போல, கால் விளங்காதவர்களின் காலை செயல்படுத்த, மூளையிலிருந்து வரும் செய்தியைப் படித்து காலுக்கு அனுப்பும் சில்லுகளும் இருக்கின்றன.


இதில் அடுத்த படி, ஒருவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும், அவரின் சிந்தனைகளை படித்து செய்தியாக இன்னொருவருக்கு அனுப்புவதும்.

கருத்துகள் இல்லை: