வியாழன், மார்ச் 26, 2009

ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் !

அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு


முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா! செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை யிரக் கணக்கில் ஏறிக்கொண்டு போவதாயும் அறியப் படுகிறது! அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!



உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது! செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். னால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக்களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !



ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது. அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது. 150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட டினவாம் ! நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !



யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது. வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது. அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.



நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார். புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன. ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன. அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர். இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது. அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !



காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது ! அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும். அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது. அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.





நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் யின. அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது. அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது. ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.

thanks to mr.சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

புதன், மார்ச் 25, 2009

டைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன

ராபர்ட் ராய் ப்ரிட்


பெரும்பாலான தொல்லின ஆராய்ச்சியாளர்கள் இன்றைய பறவைகள் முன்னாள் டைனசோர்களிலிருந்து பரிணாமம் அடைந்தவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த டைனசோர்கள் எந்த அளவுக்கு இன்றைய பறவைகளை இத்திருக்கின்றன என்பது பற்றி பல கேள்விகள் இருக்கின்றன.



டைனசோர்கள் வெப்பரத்த உடையவைகளாகவும், வேகமுடையவைகளாகவும், தந்திரமான மாமிச உண்ணிகளாகவும் இருந்தனவா அல்லது மெதுவாக நகர்பவையாகவும் மடத்தனமாகவும் இருந்தனவா என்பது நிபுணர்கள் இன்னமும் விவாதிக்கும் ஒரு விஷயம்.



டைனசோர்களின் எலும்புகளை ஆராய்ந்த ஒரு புதிய ஆராய்ச்சி, சுராசிக் பார்க் படத்தில் வந்தது போன்று வேகமுடையவையாக இருந்தன என்று காட்டுகிறது.



மாமிசம் சாப்பிடும் டைனசோர்கள் மிகவும் சிக்கலான அமைப்புள்ள நுரையீரல்களைக் கொண்டிருந்தன என்பதும், அந்த அமைப்பு இன்றைய பறவைகளில் இருக்கும் நுரையீரலை ஒத்திருக்கின்றன என்பதும் ஒஹையோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பாட்ரிக் ஓக்கான்னர் அவர்கள் தலைமையில் ஆராய்ச்சி செய்த குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. டெரோபோட் டைனசோர்கள் என அழைக்கப்படும் இரண்டு கால்களால் நடக்கும் டைனசோர்கள் பறவைகள் போன்ற கால்களுடனும், தங்கள் எலும்புகளுக்குள் காற்றை அழுத்தி அனுப்பு எடைகுறைவானதாக இருந்தனவென்றும், இது இன்றைய பறவைகளை ஒத்திருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.




கடந்த முப்பதாண்டுகளில் பறவைகளே இன்றைய டைனசோர்கள் என்ற கொள்கையை தீவிரமாக சிந்தித்து வந்திருக்கிறார்கள். 1996இல் sinosauropterx சினோசாரோப்ட்ரெக்ஸ் என்ற பறவைகள் போல பல அங்கங்களும் கொண்ட நன்றாக பாதுகாக்கப்பட்ட ஒரு டைனசோரின் மீதங்கள் கண்டறியப்பட்ட போது உறுதி செய்யப்பட்டது.


இன்னும் பல ஆராய்ச்சிகள் டிரெக்ஸ் வளர்ந்த பின்னால், உடலெங்கும் மீன் போன்று சிதில்கள் கொண்டு இருந்தாலும், அதன் குஞ்சுகள் இறக்கைகள் கொண்டவையாக இருந்தன என்பதை உறுதி செய்திருக்கின்றன.



இருப்பினும், தொல்லின ஆராய்ச்சியாளர்கள், (paleontologists) முதலைகள் போன்று குளிர்ரத்தமுடையவை என்று டைனசோர்களை கருதி வந்தார்கள். ஊர்வன (reptile)வற்றின் எளிய இதயம் மிகவும் குறைவான ஆக்ஸிசனையே ரத்தத்துக்கு அனுப்புகிறது. இது பறக்க போதுமானதல்ல.




நவீன கம்ப்யூட்டர் டோமோகிராபி (CT) scans மூலம் டைனசோர் இதய எலும்புகளை ஐந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தபோது, அவற்றில் நான்கு பகுதிஉள்ள இதயம் பாலூட்டிகளைப் போன்றும், பறவைகள் போன்றும் இருந்தது கண்டறியப்பட்டது.



இந்த வருடம் ஒரு அரிதாக கிடைத்த டிரெக்ஸின் மென்திசுக்களைஆராய்ந்தபோது அது ஆஸ்டிரிச் கோழியின் மென்திசுக்களை ஒத்து இருந்ததும் அறியப்பட்டது.



வெப்பரத்தமா குளிர்ரத்தமா ?



ஒரு பறவையின் காற்றுப்பை அமைப்புகள் அதன் உடலெங்கும் அமைந்துள்ளன. அந்த காற்று நுரையீரலுள் இரண்டு முறை செலுத்தப்படுகிறது. இது மிகவும் துல்லியமான சுவாசிக்கும் அமைப்பை உருவாக்குகிறது.



மிகவும் சிக்கலான இதயங்களுடன் கூடிய இந்த உயர்ந்த சுவாசிக்கும் அமைப்பு பறவையின் மெடபாலிஸத்தை அதிகரித்து அதனை வெப்பரத்த உயிரியாக ஆக்குகிறது. அதாவது தங்களது உடலின் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும், ஒரே சீராக வைக்கும் ஒரு அமைப்பை இவைகள் கொண்டிருக்கின்றன.



ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள். இவைகளின் சுற்றுச்சூழலின் தட்பவெப்பத்தின் மூலம் தங்களது உடலின் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்த விழைக்கின்றன.




டைனசோரின் சுவாசிக்கும் அமைப்பு இன்றைய பறவைகளின் சுவாசிக்கும் அமைப்பு போலவே இல்லாமல் இருந்தாலும், 'அது நிச்சயம் ஒரு முதலையின் அமைப்பு போன்றதல்ல என்பது தெளிவு ' என்று ஓ 'கானர் கூறுகிறார்.




டைனசோர்களின் அமைப்பு இதனால் வெப்பரத்தமுடையது என்றும் கூறிவிட இயலாது. விவாதம் தொடரும்போது, மறைந்துவிட்ட இந்த உயிரிகளின் அமைப்பும் ரத்தமும், குளிர்ரத்த அமைப்புக்கும் வெப்ப ரத்த அமைப்புக்கும் இடையே இவை இருக்கலாம் என்று சிந்திக்கிறார் ஓ 'கானர்.

----

thanks to thinnai.com

இறப்பில்லாத வாழ்க்கை: ஒரு அறிவியற்பூர்வமான உண்மையா ?

நீங்கள் இன்னும் 20 வருடங்கள் உயிரோடு இருந்தால், நீங்கள் ஒருவேளை இறப்பில்லாமல் வாழலாம்.


பிறந்த நாள் முதலாக, நாம் நிச்சயமாக நடக்கப் போகும் இறப்புக்கு எதிராக போராட ஆரம்பித்துவிடுகிறோம். இன்றைய புள்ளிவிவரங்கள் இன்று பிறக்கும் ஒரு குழந்தை சராசரியாக 76 வருடங்கள் வாழும் எனச் சொல்கின்றன. ஆனால், இந்த சராசரி பழைய சராசரி அல்ல.


உதாரணமாக, 1796இல், சராசரி மனித வாழ்வு 24 வருடங்கள். சுமார் 100 வருடங்களுக்குப்பின்னர் இது 48ஆக ஆனது. இன்று இது 76ஆக இருக்கிறது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆண்டி-ஏஜிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் டாக்டர் ரொனால்ட் க்ளாட்ஜ் அவர்கள், 'இன்று வயதுக்கு வரும் பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்களுடைய 100ஆவது வயதில் ஆரோக்கியத்துடன் இன்னும் பல வருடங்களை எதிர்பார்ப்பார்கள்.. இன்றைய வயதுக்கு வரும் மக்கள் பலர் 120 அல்லது 150 வருடங்கள் நிச்சயம் வாழ்வார்கள் ' என்று கூறுகிறார்.



இன்றைய அறியலறிஞர்கள், மனித ஜீன் உள்ளே புகுந்து ஆராய்வதிலிருந்து, வேலைப்பளுவும், உணவும் எப்படி மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று ஆராய்வது வரை எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தன்னை இளமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என விரும்பும் மக்கள், ஹார்மோன் சிகிச்சையிலிருந்து, முகத்தின் சுருக்கங்களை நீக்கும் அறுவைச்சிகிச்சை வரை எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகள் வெறுமே வாழும் நாட்களை நீடிக்கவைக்கத்தான் முடியும்.



'வயதாவதை தடுக்கும் மருந்தின் நோக்கம், வாழ்நாளின் கடைசி நாட்களை இன்னும் நீட்டுவதல்ல. வாழ்நாளின் நடுவாந்திர பகுதியை நீட்டுவதைப் பற்றியது... இன்னும் வாழ்நாளின் கடைசி வருடங்களை மிகவும் சுருக்கி, வயதாவதால் வரும் நோய்களை மிகமிக கடைசியாக வரவைப்பதையும், இறப்புக்குச் சற்று முன்னரே அந்த வியாதிகளைக் கொண்டுவருவதையும், முடிந்தால் அந்த நோய்களே வராமல் தடுப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டது. ' என்று டாக்டர் க்ளாட்ஜ் கூறுகிறார்.



மனிதன் வயதுமுதிர்வதின் காரணம் இன்று புரிபட்டிருக்கிறது.



இறுதியாக மனிதன் வயதாவதின் காரணம் இன்று தெரியவந்திருக்கிறது. இதனால், சுருக்கம் நீக்கும் அறுவைச்சிகிச்சைகளும், மருந்துகளும், பாம்பு எண்ணெய் சமாச்சாரம் போல ஆகிவிடும். விண்வெளிப் பிரயாணம் போன்றவைதான் நவீன தொழில்நுட்பத்தின் பயன்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, மெதுவாக, இறவாமை என்பது நவீன தொழில்நுட்பத்தின் பக்க விளைவாக மெளனமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஜான் லாங்மோர் (படம்) அவர்களும் அவரது தோழர்களும் மனித செல்லின் உள்ளே உயிரின் அடிப்படை தளமான டி.என்.ஏ மூலக்கூற்றை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அந்த டி.என்.ஏ மூலக்கூற்றின் உள்ளே முன்னால் பார்க்கப்படாத ஒரு திருப்பித்திருப்பி வரும் என்சைம் ஜோடிகளைப் பார்க்கிறார்கள்.



Telomeres - டெலோமர்ஸ் - இறப்பின் வடிவம்



டெலோமர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மூலக்கூறு சங்கிலிகள் ஒரு நாடாவின் முடிவில் இருக்கும் வெற்று குஞ்சம் போன்றவை. உண்மையில், இந்த டெலோமெர்ஸ், ஒரு டி.என்.ஏ இரண்டாகப் பிரியும்போது, அந்த இறுதிகளை நேராக சரிசெய்யும் வேலை செய்பவை. இந்த டி.என்.ஏ மூலக்கூறுகள் தவறாக பிரதி எடுக்கப்படக்கூடாது என்று இந்த பிரதி எடுக்கும் வேலையைப் பாதுகாக்கும் இந்த டெலோமர்ஸ் முக்கியமான டி.என்.ஏ சங்கிலிகள் தொலைந்து போய்விடக்கூடாது என்று சரி பார்ப்பவை.



செல் வயதாக வயதாக, இந்த செல் தொடர்ந்து ஆக்ஸைடுகளாலும், உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகல்களாலும், தாக்கப்படுகின்றன. நாம் உயிர்வாழ்வதன் காரணம், இந்த செல்கள் இந்த தாக்குதல்களால் இறந்து போவதற்கு முன்னால், தன்னைத்தானே பிரித்து இரண்டு செல்களாக ஆக்கிக்கொண்டே இருப்பதுதான். நம்முடைய செல்கள் ஒவ்வொருமுறை இரண்டாகப் பிரியும்போதும், நம்முடைய செல்லில் இருக்கும் டி.என்.ஏவின் ஒரு சிறுபகுதி தொலைந்து போய்விடுகிறது. அடுத்த பிரதிக்குப் போவதில்லை. இந்த தொலைந்து போகும் பகுதி பெரும்பாலும் இந்த டெலோமெர்ஸ் பகுதிதான். ஆகவே, இவ்வாறு தொலைந்து போவதால் பக்க விளைவு இல்லை.



அறிவியலறிஞர்கள் சமீபத்தில் கண்டறிந்தது, இந்த டெலோமர்ஸ் சங்கிலிகள் நாம் வயதாக வயதாக நீளத்தில் குறைந்து கொண்டே போகின்றன என்பதுதான். ஆகவே, இந்த டெலோமெர்ஸ்கள் மிகவும் சுருங்கியபின்னர், நம் உடலில் நடக்கும் செல்கள் பிரிவு, டி.என்.ஏவின் முக்கிய பகுதிகளை பாதிக்கத் தொடங்குகிறது. இதனால், சரியாக டி.என்.ஏ பிரதி எடுக்கப்படுவதில்லை. இது டி.என்.ஏவை கெடச்செய்து செல்களை பலவீனப்படுத்துகிறது. இதுவே நாம் வயதாவதின் காரணம்.



டாக்டர் லாங்மோர் அவர்கள், பெளதீக, உயிரியல், மரபணு தொழில்நுட்ப உபாயங்கள் கொண்டு, இந்த டெலோமர்ஸின் வேலையை ஆராய்கிறார். இவரது குழு, செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏவில் வேலை செய்யும் டெலோமெர்ஸ் கொண்டு, எவ்வாறு இந்த டெலோமரெஸ்கள் குரோமசோம்களை நிலையாக வைத்திருக்கின்றன என்பதையும், எவ்வாறு இந்த டெலேமரெஸ்கள் நீளம் குறைவதால் நிலையில்லாமை இந்த குரோமசோம்களில் புகுகின்றது என்பதையும் ஆராய்கிறது.



இந்த குரோமசோம்களை நிலையாக வைத்திருக்க தேவையான புரோட்டான்கள் கண்டறியப்பட்டு, பிரதிஎடுக்கப்படுகின்றன (cloned), ஆராயப்படுகின்றன. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் இந்த மாதிரி டெலோமரெஸ்களின் வடிவமைப்பு நேரடியாகப் பார்க்கப்படுகின்றது. இவரது குழு, புதிய என்சைம் வேதிப்பொருட்கள் மூலம் இந்த டெலோமரெஸ் டி.என்.ஏக்களின் வடிவமைப்பை ஆராயவும், இதில் சாதாரண செல்களின் உள்ளே இருக்கும் டி.என்.ஏவின் உள்ளேயும், அசாதாரண டி.என்.ஏவின் உள்ளேயும் இருக்கும் டெலோமர்ஸ்களின் வடிவமைப்பை கருத்தில் கொண்டு இது எவ்வாறு கேன்ஸர், முதுமை ஆகியவற்றில் பங்கு வகிக்கிறது என்பதையும் ஆராய்கிறார்கள்.


வியூசோன் டாக்டர் டாங்மோர் அவர்களிடம் எடுத்த பேட்டி இதோ.


கேள்வி: டெலோமர்ஸ்களின் வேலை என்ன ? இந்த டெலோமர்ஸ்களின் நீளத்தை அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்ட என்சைம் என்ன ?



பதில்: டெலோமர்ஸ்கள் (Telomeres) முக்கியமான டி.என்.ஏ சங்கிலிகள். இவை குரோமசோமின் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன. ஒவ்வொருதடவை ஒரு குரோமசோம் இரண்டாகப் பிரியும்போதும், இந்த டி.என்.ஏவின் இரண்டு பக்கமும் இருக்கும் பகுதிகளில் ஒரு சிறிதளவு காணாமல் போய்விடுகின்றது. ஏன் காணாமல் போகின்றது எனத் தெரியவில்லை. மனித டெலோமர்ஸ் நீளம் குறைவது என்பது, மற்ற கீழ் விலங்குகளில் இருக்கும் டெலோமர்ஸ் நீளம் குறைவதை விட அதிக வேகத்தில் நடைபெறுவதால், ஒருவேளை இவ்வாறு நீளம் குறைவது மனிதர்களைப் பொறுத்த மட்டில் நல்லதாக இருக்கலாம். அதாவது இறப்பு. முதுமை பற்றிய டெலோமர்ஸ் தேற்றம் என்ன சொல்கிறதென்றால், ஒரு மனிதனின் வாழ்நாளில் டெலோமர்ஸ் நீளம் குறைவது இயற்கையாக நடக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நீளம் வந்ததும், ஒரு சிக்னல் செல்களுக்குப் போகிறது. அதாவது இனிமேல் வளரவேண்டாம். இதனை செனெஸ் (senesce) என்கிறோம். பிறக்கும்போது, மனித டெலோமர்ஸ் நீளம் சுமார் 10,000 ஜோடிகள். நூறு வயதாகும்போது, இந்த நீளம் சுமார் 5000 ஜோடிகளாகக் குறைந்துவிடுகிறது.


டெலொமரெஸ் (Telomerase) என்பது அடிப்படையில் ஒரு என்சைம். (enzyme, a catalytic protein) இது டெலோமர்ஸின் நீளத்தைக் குறைப்பதையும், நிறுத்துவதையும் செய்யக்கூடும். இது குழந்தை உருவாகும்போதும் முட்டையில் இருக்கும்போது, டெலோமர்ஸின் நீளத்தைப் பாதுகாக்கவும், அந்த குழந்தை தன் சந்ததியை உருவாக்கவும் தேவையான அளவு நீளத்தை சரிபார்க்கவும் தேவையான என்சைம்.


கேள்வி: பிறப்புக்குத் தேவைப்படாத செல்களில் இறப்பு என்பது எப்படி நல்ல விளைவு ?



பதில்: கான்ஸர் பற்றிய டெலோமர் தேற்றம் என்ன கூறுகிறதென்றால், ஒரு டெலோமரின் முக்கியமான வேலை, டெலோமர் சரியான நேரத்தில் தன்னுடைய செல் பிரிதலை நிறுத்தாமல் தொடர்ந்து செல்கள் பிரிந்து கொண்டே போய் கட்டியாக( tumor) ஆகி விடுகிறது. டெலோமர் சரியான நேரத்தில் தன்னுடைய நீளத்தை நிறுத்துக்கொண்டால், இவ்வாறு செல்கள் பிரிந்து கொண்டே போகாது. இது கான்ஸரை நிறுத்தும்.



கான்ஸரில் இருப்பது சாகாத செல்கள். இந்த சாகாத செல்கள், இறப்பதற்கு முடிவு செய்யப்பட்ட மற்ற சாதாரண செல்களை விட அதிக பலம் பெற்றுவிடுகின்றன. இயற்கை வடிவமைத்த இந்த மனித டெலோமர் சுருக்கம் என்பது மனித வாழ்க்கையை நீட்டுவதற்கும், கட்டுப்படுத்த முடியாமல் பிரிந்து கொண்டே போகும் செல்களை தடுக்கவும் வடிவமைக்கப்பட்டது போல் உள்ளது.

இரண்டு வகைக் கட்டிகள் இருக்கின்றன. கெடுதி செய்யாத கட்டிகள் (benign tumors), சாகாத கெடுதியான கட்டிகள் (Malignant or immortal tumors ) என இரண்டு வகை. இந்த கெடுதியான கட்டிகளில் இருக்கும் செல்களில் இருக்கும் டெலோமர்ஸ்களின் சுவிட்சு ஆன் செய்யப்பட்டது போல இருக்கிறது. சில கான்ஸர்களும், முதுமையும், டெலோமர்ஸின் உயிரியலோடு தொடர்புடையது போல இருக்கிறது.



ஆகவே, சாதாரண செல்களின் டெலோமர்ஸ் வேலைப்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உயிரியல் ரீதியாக முதுமையை நிறுத்தலாம். ஆனால் இதன் பக்கவிளைவு அதிகப்படியான கான்ஸர்கள் தோன்றுவது. டெலொமர்ஸ் பற்றிய ஆழமான புரிதலும், இதன் தேற்றத்தை இன்னும் செழுமைப்படுத்துவதும் நமது முதுமையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள உதவும். இதன் மூலம் முதுமையை நிறுத்தவும், அதே வேளையில், கான்ஸரை நிறுத்தவும் இயலும்.



டெலோமர்ஸ் செய்யும் வேலை, நமது செல்லின் மிகவும் சிக்கலான செல் வளர்ச்சியின் இன்றியமையாத பாகம். இதில் ஏராளமான இன்னும் பல விஷயங்களும் கலந்திருக்கின்றன. டெலோமர்ஸ் நீளமாவதற்கும், குறைவாவதற்கும், நிறுத்தப்படுவதற்கும் ஏராளமான காரணிகள் நம் உடலில் இருக்கின்றன. இதில் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் எது சரியான எளிமையான வழி என்பதைக் கண்டறிந்து அதனை உபயோகப்படுத்தி, முதுமையை நிறுத்தவும், கான்ஸரை நிறுத்தவும் இயலும்.



கேள்வி: ஒவ்வொரு டி.என்.ஏவுக்கு தனி குணாம்சம் கொண்ட டெலோமர்ஸ் இருக்குமா ? அப்படி என்றால், முதுமைக்கான பொதுவான பரிகாரம் என்பது கிடையாதா ?



பதில்: வெவ்வேறு மனிதர்களுக்கு இருக்கும் டெலோமர்ஸ்கள் ஒரே மாதிரியானவை. ஆனால் வெவ்வேறு நீளம் உடையவை. ஒருவருக்கு இருக்கும் டெலோமர்ஸ் நீளத்துக்கும் அவரது வாழ்க்கை வருடங்களுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அவரசப்பட்டு சொல்லிவிட முடியாது. இந்த டெலோமர்ஸ் நீளம் குறையாமல் தடுப்பதன் மூலம் முதுமையை நிறுத்திவிட முடியுமா என்பதையும் அவசரப்பட்டு சொல்லிவிட முடியாது. ஒரே மனிதருக்குள் இருக்கும் வெவ்வேறு குரோமசோம்களில் இருக்கும் டெலோமர்ஸ்கள் வெவ்வேறு நீளமுடையவையாக இருக்கின்றன. ஆகவே, ஒருவரிடம் இருக்கும் பல குரோமசோம்கள் நீளமாக இருக்கலாம். ஆனால் ஒரு குரோமசோமில் இருக்கும் டெலோமர் நீளம் குறைவாக இருந்து செல் வளர்ச்சியை பாதிக்கலாம்.



கேள்வி: ஷாய் மற்றும் ரைட் (Shay, Wright ) ஆகியோர் செய்த வேலையில், டெலோமரீஸ் telomerase என்சைம் கொண்டு டெலோமர் நீளத்தை அதிகரித்தார்கள். இது முக்கியமானதா ?



பதில்: ரைட் அவர்களும் அவரது சகாக்களும் டெலோமரீஸ் என்சைம் கொண்டு சாதாரண செல்களைத் தூண்டினார்கள். அவர்கள் 1) டெலோமர்ஸ் நீளம் அதிகரிப்பதையும், 2) செல்லின் வாழ்நாள் அதிகரிப்பதையும் எதிர்பார்த்தார்கள். விளைவு அவர்கள் எதிர்பார்த்தது போலவே இருந்தது.


கேள்வி: இந்த டெலோமரீஸ் என்சைம் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதில் எவ்வளவு செல் வாழ்நாள் அதிகரிக்கப்பட்டது ?



பதில்: அந்த செல் வாழ்நாள் அதிகரிப்பு என்பது, மனித வாழ்க்கையில் பல நூறு வருடங்கள் வாழ்நாள் அதிகரிப்புக்குச் சமானம்.


**

டாக்டர் லாங்மோர் அவர்கள், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி முடித்தவர். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பாஸல் பல்கலைக்கழகத்திலும் போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் பதவி வகித்தவர்.


http://www.viewzone.com/aging.html

thanks to thinnai.com

செவ்வாய், மார்ச் 24, 2009

அறிவியலில் ஒரு வாழ்க்கை

ஸ்டாஃபன் ஹாக்கிங் (Stephen Hawking)

கைக்குள் பேரண்டம் (Universe in a Nutshell) என்ற ஸ்டாஃபன் ஹாக்கிங் அவர்களது சமீபத்திய புத்தகம் விற்பனை நிலையங்களுக்கு வரத்துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கையையும் அவரது சிந்தனைகளையும் இங்கு சில குறிப்புகளாக வருகிறது


ஸ்டாபன் ஹாக்கிங் 1943ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் நகரத்தில் பிறந்தார். அவர் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை முடிக்கும் கடைசி வருடம் அவருக்கு அமைட்ரோபிக் லாட்டரல் ஸ்லரோஸி (ALS) என்ற வியாதி இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.


நரம்பு சம்பந்தமான இந்த வியாதி மருந்துகள் மூலம் தீர்க்க இயலாத, தொடர்ந்து அழிவை ஏற்படுத்தும் ஒரு வியாதி. உடலின் சக்தி செல்லுகளை தொடர்ந்து பாதித்து உடலெங்கும் பக்கவாதத்தை தோற்றுவித்து விடும். இது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 5 வருடத்தில் மரணம் நிச்சயமாகி விடுகிறது பெரும்பாலும்.


எல்லா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஹாக்கிங் தொடர்ந்து வாழ்கிறார். உடல் குப்பையாகி விட்டது. அவரால் பேச முடியவில்லை. அவரை பாதுகாப்பவர்கள் மீது அவர் நம்பி வாழும் சூழ்நிலை தோன்றிவிட்டது. ஆனால் அவரது மனமோ தொடர்ந்து சக்தியோடு வலிமையோடு, புதிய எல்லைகளைத் தொட்டு வளர்கிறது.


காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இவர், அங்கு ஆராய்ச்சியாளராக பதவி உயர்வு பெற்று 1979இல் கணிதத்துக்கான லுகாசியன் பேராசிரியர் கெளரவத்தை அடைந்தார். இந்த பதவியை ஒரு காலத்தில் அணி செய்தவர் ஸர் ஐசக் நியூட்டன்.


ஆனால் இவரது கதை அங்கு யாருக்கும் தெரியாத ஒரு மூலையில் இவரது வாழ்வு முடிந்திருக்கும். ஆனால் அப்போது இவரது புத்தகம் வெளிவந்தது.


'காலத்தின் சிறிய வரலாறு ' என்ற புத்தகத்தை 1988இல் ஹாக்கிங் பிரசுரித்தார். பேரண்டத்தின் ஆரம்பம் முடிவு பற்றிய அப்போது பேசப்பட்டு வந்த அனைத்து தேற்றங்களையும் தொகுத்து தன்னுடைய கருத்துக்களையும் தொகுத்து இவர் அளித்த இந்த புத்தகம் மாபெரும் அதிக விற்பனை பெற்று முன்னணியில் வந்தது.


இந்தப் புத்தகம் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 1 கோடி புத்தகங்கள் விற்றன. 'யாரும் படிக்காத அதிக விற்பனையாகும் புத்தகம் ' என்று கேலி விமர்சகர்களால் அழைக்கப்பட்டாலும், இந்தப் புத்தகம் மக்களுக்கான அறிவியல் புத்தகங்களில் முக்கியமான இடத்தை இன்றும் வகித்து வருகிறது. இந்தப் புத்தகத்துக்குப் பின்னர் ஹாக்கிங் பேரரசர்களாலும், பிரதமர்களாலும், ஜனாதிபதிகளாலும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.



அந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த புதிய புத்தகமான 'கைக்குள் பேரண்டம் ' இன்று பேசப்பட்டு வரும் புதிய தேற்றங்களையும் இன்னும் ஹாக்கிங் அவர்களது தத்துவார்த்த சிந்தனைகளையும் கொண்டுள்ளது.


அவரது முக்கியமான தேற்றம் என்பது 'அறிவியலாளர்கள் ஏற்கெனவே அனைத்துக்குமான தேற்றத்தை (theory of everything)ஐ கண்டுபிடித்து விட்டார்கள் ' என்பதுதான்.


மிக நுணுக்கமான பொருட்களை ஆராயும் க்வாண்டன் அறிவியலும், மிகப்பெரிய பொருட்களை பேசும் 'பொதுச் சார்பியல் கொள்கையும் ' இணைந்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு அனைத்துக்குமான தேற்றம் உருவாகும் என்ற கருத்தை ஐன்ஸ்டான் தெரிவித்தார்.


ஹாக்கிங் அவர்களும் அவரது தோழர்களும், காலவெளி 11 பரிமாணங்களைக் கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார். இந்த புது தேற்றம் அனைத்தையும் விளக்கும் என்று கூறுகிறார் ஹாக்கிங்

thanks to thinnai.com

எகிப்தை அழித்தது என்ன ?

4200 வருடங்களுக்கு முன்னர், எகிப்தின் மாபெரும் சமுதாயம் அழிந்தது எப்படி ?

எகிப்தின் ஃபரோ பேரரசர்கள் உலகத்தின் நின்று நிலைக்கும் பெரிய கிஜா பிரமிடுகளைக் கட்டினார்கள். 1000 வருடம் நின்று நிலைத்த இந்த சமுதாயம், மத்திய அதிகாரம் திடாரென நொறுங்கியது. அடுத்த 100 வருடங்களுக்கு நாடு குழப்பத்தில் ஆழ்ந்தது.

என்ன நடந்தது ? ஏன் நடந்தது என்பது இன்னும் விவாதத்துக்குரியதாக இருக்கிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஃபெக்ரி ஹாஸன் இந்த மர்மத்தை விடுவிக்க விரும்புகிறார். அதற்குத் தேவையான அறிவியல் தடங்களைத் தேடுகிறார்.

அன்க்டிஃபி என்ற பிராந்திய ஆளுனருக்காக பழங்காலத்தில் கட்டப்பட்ட தெற்கு எகிப்தில் இருக்கும் சிறிய கல்லறையில் ஹிரோகிலிஃபிக்ஸ் எழுத்துக்களில் 'வடக்கு எகிப்தில் எல்லோரும் பசியில் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கொன்று தின்கிறார்கள் ' என்று எழுதியிருப்பது இவருக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

பல எகிப்து நிபுணர்களால், 'மிகைப்படுத்தப்பட்டது ' என்றும் 'கற்பனை ' என்றும் ஒதுக்கப்பட்ட இந்த வரிகளை உண்மை என்றும் நிச்சயமாக நடந்தது என்றும் ஃபெக்ரி நிறுவ முனைகிறார். இத்தகைய சோகத்தை உருவாக்கும் ஒரு காரணியையும் அவர் கண்டறிய வேண்டும்.

'எகிப்தியர்கள் வாழ்ந்த சூழ்நிலையில் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்து நினைத்தேன் ' என்று கூறுகிறார். எகிப்திய வாழ்க்கைக்கு இதயமாக இருந்த நைல் நதியிலேயே இதற்கான காரணம் இருக்க வேண்டும் என்றும் இவர் நினைத்தார்.

7 ஆம் நூற்றாண்டிலிருந்து சரியாக குறிக்கப்பட்டிருக்கும் நைல் நதி வெள்ளங்கள் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் நைல் நதி வெள்ளம் அளவில் மிகவும் மிகவும் வருடாவருடம் மாறுபடுவதையும் கண்டார். இந்த வெள்ளங்களே நிலத்தை பாசனம் செய்ய பயன்படுகின்றன.


ஆனால் கிமு 2200க்கு என்ன ஆவணம் இருக்கும் ? பக்கத்து இஸ்ரேலில் கண்டறியப்பட்ட புதுக் கண்டுபிடிப்பு இவருக்கு திடாரென உதவியது. ஜியாலஜிகல் ஸர்வேயில் பணிபுரியும் பார் மாத்யூஸ் என்பவர் டெல் அவீவ் நகரத்துக்கு அருகில் இருக்கும் குகைகளில் இருக்கும் ஸ்டாலசைட், ஸ்டால்கமைட் தூண்கள் பழங்காலத்திய தட்பவெப்பம் பற்றிய ஆவணங்களாக இருப்பதைக் கண்டறிந்தார். (ஸ்டாலசைட் என்பது குகையின் மேலிருந்து வழியும் சுண்ணாம்புத் தூண். ஸ்டால்கமைட் என்பது, சுண்ணாம்பு குகையின் தரையில் கொட்டுவதால் உருவாகும் தூண். மேலே இருக்கும் தூணும் கீழே உருவாகும் தூணும் மெல்ல மெல்ல வளர்ந்து இணையும். இந்த சுண்ணாம்பு வழிவது அங்கிருக்கும் தட்பவெப்பத்தைப் பொறுத்தது)


இவைகளை ஆராயும் போது, கிமு 2200 வருடத்தில், மழை திடாரென 20 சதவீதம் குறைந்திருப்பது தெரிந்தது. கடந்த 5000 வருடங்களில் மிகக்குறைந்த மழையளவு இது.

இஸ்ரேலும், எகிப்தும் வெவ்வேறு தட்பவெப்பங்களை கொண்டவை. எனவே ஃபெக்ரிக்கு உலகம் முழுவதும் நடந்திருக்கக்கூடிய தட்பவெப்ப நிகழ்ச்சியாக அது இருக்க வேண்டும் எனப்பட்டது. அப்படிப்பட்ட உலகளாவிய தட்பவெப்ப நிகழ்சியாக இருந்தால் மட்டுமே அது எகிப்தின் பழைய மன்னராட்சியையும் பாதித்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு தடயமும் அவருக்குக் கிடைத்தது.

கொலம்பியா பல்கலைக்கழத்தின் லாமாண்ட்-டோஹர்டி பூமி ஆராய்வகத்தில் பணியாற்றும் ஜ்யாலஸிஸ்ட் ஜெரார்ட் பாண்ட் அவர்கள் ஐஸ்லாந்தின் கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலைகளை ஆராய்கிறார். தெற்கு நோக்கிய இவைகளின் பிரயாணத்தில் அவை சில எரிமலை சாம்பலை கடலின் அடியில் விட்டுச் செல்கின்றன.

முழு அளவு உருகுவதற்கு முன்னர் அவை எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கின்றன என்பதை வைத்து அந்த வருடம் எவ்வளவு குளிராக இருந்திருக்கிறது என்று கண்டறியலாம். கடலடியில் இருக்கும் மண்ணை நேராக நோண்டி பரிசோதனை செய்வதன் மூலம், எந்த வருடம் எவ்வளவு குளிராக இருந்திருக்கிறது என்றும் ஆராயலாம். ஐரோப்பாவில் ஒவ்வொரு 1500 வருடங்களுக்கும் ஒரு முறை சின்ன பனியுகம் வருகிறது என்று கண்டறிந்தார். ஒவ்வொரு முறையும் இந்த பனியுகம் சுமார் 200 வருடங்களுக்கு நீடிக்கிறது என்றும் அறிந்தார். அப்படிப்பட்ட ஒரு சின்ன பனியுகம் கிமு 2200வில் வந்தது என்றும் கண்டறிந்தார்.


ஜெரார்டின் நண்பரான பீட்டர் டிமெனோகல் உலகம் முழுவதும் அதே நேரத்தில் எப்படி தட்ப வெப்பம் இருந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தார். மணலிலிருந்து, பூகந்தம் வரை எல்லாவற்றையும் ஆராய்ந்தால், பதில் ஒன்றுதான். இந்தோனேஷியாவிலிருந்து மத்திய தரைக்கடல் பிரதேசம் வரை, கிரீன்லாந்திலிருந்து வட அமெரிக்காவரை எல்லா இடங்களிலும் தீவிரமான தட்பவெப்ப மாறுதல் அதே வருடத்தில் நடக்கிறது.


ஃபெக்ரி நம்பிய எல்லாவற்றையும் அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள். தீவிர தட்பவெப்ப மாறுதல் காரணமாக 4200 வருடங்களுக்கு முன்னர் பெரும் மனித சோகம் நடந்தது. இப்போதுதான் அதை நாம் அறிந்து கொள்கிறோம்.


இந்தப் புதிரின் கடைசிப்பகுதிகளை விடுவிக்க ஃபெக்ரி எகிப்தில் இருக்கிறார். நைல் நதியிலிருந்தே தீவிரமான தட்பவெப்ப மாறுதலுக்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். இவர் பழங்காலத்திலிருந்து இன்றுவரை நைல் நதியின் துணை நதி வந்து நீர் நிரப்பும் ஒரு பெரிய ஏரியின் அடியில் இருந்து நெட்டுக்குத்தாக நோண்டி எடுத்த படிவங்களிலிருந்து அந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்தார்.


பழைய மன்னராட்சி நொறுங்கிய அந்தக் காலக் கட்டத்தில், அந்த மாபெரும் ஏரி முழுக்க முழுக்க காய்ந்து போய் இருந்தது என்பதைக் கண்டறிந்தார். வரலாற்றிலேயே அந்த ஒரு முறையே அந்த ஏரி முழுக்கக் காய்ந்திருக்கிறது. அன்க்டிஃபியின் கல்லரையில் எழுதப்பட்டிருந்த வரிகளை உண்மைதான் என்று கடைசியில் ஃபெக்ரி நிரூபித்து விட்டார். மக்களை அப்படிக் கொன்றது இயற்கைதான்.


பிபிஸி இரண்டில் வியாழக்கிழமை 26 சூலையன்று 2100 பிஎஸ்டி நேரத்தில் இந்த பழங்காலத்திய அழிவு பற்றிய விவரணப்படம் வெளியாகிறது.
thanks to thinnai.com

ஞாயிறு, மார்ச் 15, 2009

உலக வெப்ப ஏற்றம் (Global warming) 'பயந்ததைவிட மோசம் '




உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது.

தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) சார்ந்த விஞ்ஞானிகள், முன்பு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உலக வெப்பம் ஏறும் என்று கூறுகிறார்கள்.


1990இல் இருந்ததை விட 6 டிகிரி இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன் இந்தக் குழு 3 டிகிரி மட்டுமே ஏறும் என்று கணக்கிட்டிருந்தது.



தொழிற்சாலைகளிலிருந்து வரும் கரியமிலவாயுவும் கரிப்புகையும் உலக காடுகள் மொத்தமாக அழியவும், கடல் மட்டம் உயரவும், பயிர்கள் விளைச்சலின்றி போவதும், மிகுந்த குளிரும் , மிகுந்த வெப்பமுமாக இனி இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.


இந்த படிவம், ஆரம்பப்படிவம். அடுத்த மே மாதம் சற்று மாற்றப்பட்டு இது வெளியிடப்படலாம்.



அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் இது பேசப்படும். இந்த மாநாட்டில், தட்பவெப்ப மாறுதல்களை தடுக்க உருவான கியோட்டோ வரைமுறைகளை ஒத்துக்கொண்ட நாடுகள் பங்கு பெறும்


இது போன்ற தட்பவெப்பதை பாதிக்கும் வாயுக்களின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி 1990 அளவிலிருந்து, 2008இலிருந்து 2012க்குள், 5.2 சதம் குறைப்பதாக ஒப்புக்கொண்ட நாடுகள் இவை.


கடந்த 50 வருடங்களில், பெட்ரோல் போன்ற எரிபொருட்களை எரிப்பதும் மற்ற உலகத்தை அழுக்குச் செய்யும் செய்கைகளை (pollution) செய்வதும் அதிகரித்ததனால், இந்த வெப்ப அதிகரிப்பு அதிகமாகி விட்டது என்று கூறுகிறது இந்த படிவம்.


கரிப்புகை அதிகமாக வெளியிடப்படுவது, வெப்பம் அதிகமாவதன் முக்கிய காரணம். 2100க்குள் வருடத்துக்கு 35 முதல் 40 கிகா டன் கரிப்புகையை வெளியிட ஆரம்பித்துவிடுவோம் என்று கூறுகிறார்கள். (ஒரு கிகா டன் என்பது 1,00,00,00,000 டன்)


இப்போது கரிப்புகை CO2 வெளியீடு 6.8 கிகாடன் அளவு வருடத்துக்கு.


உலக வெப்பம் ஏறினால், உலகத்தின் அனைத்துக் காடுகளும் அழிந்து போகும். அப்படி அழிவது இன்னும் வெப்பத்தை உருவாக்கும். வெப்பம் ஏறுவதால், உலகத்தின் தெற்கிலும் வடக்கிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் ஏறும். இவ்வாறு ஏறுவது உலகெங்கும் வெள்ளத்தையும், சிறு தீவுகள் கடலுக்குள் சென்று மறைவதும், நிகழும். உதாரணமாக மாலத்தீவுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும், சென்னை மாநகரமும், பம்பாயும் கல்கத்தாவும் மறைந்து போகும்.

நன்றி பிபிஸி

கம்ப்யூட்டர் வைரஸ்

Computer Virus என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதனை நாம் தமிழில் கிருமி நிரல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய கிருமிநிரல்களும் நாம் கணினியில் பயன்படுத்தும் மற்ற நிரல்கள்(Programs) போன்றவையே. அப்படி இருக்க இதனை ஏன் நாம் கிருமி நிரல்கள் என்று சொல்லவேண்டும் ?..

சில நிரல்கள் அழிவுப்பணிக்காக எழுதப்படுகின்றன, எப்படி கிருமிகள் நமது உடலில் புகுந்தால் அது நமது உடலுக்கு உபாதைகளை விளைவிக்கிறதோ அதுபோல இத்தகைய அழிவுப்பணிக்காக எழுதப்பட்ட நிரல்களும் நமது கணினிக்குள் புகுந்தால் அதற்குப் பல உபாதைகளை விளைவிக்கிறது. இங்கு கணினிக்கு உபாதைகள் என்று நான் கூறுவது கணினியில் உள்ள தரவுகளை, மென்பொருள்களை அழிப்பது, அதிகமான இடத்தை நினைவகங்களில் ஆக்கிரமிப்புசெய்து அதன்மூலமாக கணினியின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பது, நாம் கணினியில் வேலை செய்யும்போது பல விதமான தொந்தரவுகளைச் செய்வது என்று பட்டியல் நீளும்...

இத்தகைய நிரல்களை நாம் கிருமி நிரல்கள் என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன அவையாவது

1. இந்த நிரல்கள் எப்படி கிருமி ஒரு கிருமியிலிருந்து பலவாகப் பல்கிப்பெருகுகிறதோ அதுபோல பல்கிப்பெருகவல்லவை. ஒரு கிருமி நிரல் தானாகவே தன்னைப்போன்ற கிருமிநிரலை உருவாக்கவல்லது இதனை ஆங்கிலத்தில் Self Replication என்று சொல்வதுண்டு.

2. எப்படி கிருமிகள் ஏதாவது ஊடகங்களைப்பயன்படுத்தி பரவுகின்றனவோ, அதுபோல இத்தகைய நிரல்களும் கணினியின் பல ஊடகங்களின் வழியாக ஒரு கணினியில் இருந்து மற்றொன்றுக்கு பரவுகிறது எடுத்துக்காட்டாக நெகிழ்வட்டுக்கள் (Floppy disk), மற்றும் வலையமைப்புகளின் மூலம் கோப்புகளை ஒரு கணினியிலிருந்து வேறு கணினிக்கு மாற்றும் போது அதன் வழியே இத்தகைய கிருமிநிரல்களும் அந்த கணினிக்கு பரவிவிடுகின்றன அங்கிருந்து அடுத்த கணினி என்று அதனுடைய பரவல் நடந்துகொண்டே இருக்கும்.

3. மனித உடலில் கிருமி புகுந்ததும் அது அதனுடைய குறிகளை நமக்கு உணர்த்தி நாம் நோய்வய்ப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமோ அதுபோல இந்த கிருமி நிரல்களும் நமது கணினியில் புகுந்தவுடன் அது தன் செய்யவேண்டிய அழிவுப்பணிகளையும், தொந்தரவு களையும் தந்து அதனுடைய இருப்பை நமக்கு உணர்த்தும்.இதனை ஆங்கிலத்தில் Symptoms of Virus Attack என்று கூறுவது உண்டு.

4. இத்தகைய கிருமிகள் நமது உடலில் புகுந்து விட்டதை அறிந்தும் நாம் அதனை நமது உடலை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி நோய் முற்றி நாம் சாவும் நிலைக்கு செல்லுகிறோமோ அதுபோல கிருமிநிரல்களை அப்படியே தொடரவிட்டால் நமது கணினியில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியனவற்றை நாம் இழக்க,(உயிர் போய்விடும்)வெறும் கணினி மட்டும் தான் மிஞ்சும்.

இத்தகைய கிருமி நிரல்கள் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டுக்காக மென்பொருள் பொறியாளர் களால் எழுதப்பட்டன அவர்கள் வலையமைப்பில் உள்ள தம்முடைய நண்பரின் நிரல்களை அழிப்பதற்கும், விளையாட்டாக அவர்களைத்தொந்தரவுசெய்து மகிழ்வதற்குமே எழுதப்பட்டன. இத்தகைய அளவுக்கு அவை வளர்ச்சியடைந்து கணினி உலகையே எப்பொழும் அவதிக்குள்ளாக்கிவரும் என்று அவர்கள் அந்தநேரத்தில் நினைத்திருக்கவில்லை!.

ஆரம்பகாலத்தில் வந்த கிருமிநிரல்கள் அதிகம் ஆபத்தானவைகளாக இல்லை அவைகள் நம்மிடம் விளையாடிவிட்டு மறைந்துபோய்விடும். ஜோசி என்னும் கிருமி நிரல் நமது கணினியில் புகுந்தால், அது எப்போதாவது நாம் பிற வேலையாக இருக்கும் போது திரையில் தோன்றி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல் என்று கட்டளையிடும் அது கூறியவாறு நீங்களும் 'Happy Birthday Josi ' என்று எழுதினால் பின்னர் மறைந்துவிடும். இத்தகைய கிருமி நிரல்கள் நமது கணினிக்கும் அதில் உள்ள மென்பொருள்களுக்கும் எப்பொழுதும் தீங்கு விளைவிப்பவை அல்ல.

ஆனால் சில கிருமிநிரல்கள் மிகவும் ஆபத்தானவை நமது Hard diskஐயே மொத்தமாக அழித்து விடும் அத்தோடு நமது மொத்த தகவல்களும், மென்பொருள்களும் அழிந்து விடும். இது பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரையில் மிகப்பெரிய இழப்பாக இருக்கும் நமது தனிக்கணினியைப்பொருத்தவரையில் நாம் மிகவும் விலைமதிக்க முடியாத தகவல்கள் எதனையும் அதிகம் கணினியில் வைத்திருக்கப்போவது இல்லை -மென்பொருள் அழிந்துபோய்விட்டாலும் மீண்டும் நாம் அவற்றை ஏற்றிக்கொள்ளலாம் அது சிரமும் இல்லை.

எத்தகைய வகையில் இந்த கிருமி நிரல்கள் செயல்படுகின்றன ?

இத்தகைய கிருமிநிரல்களை எழுதும் வல்லுனர்கள் எந்த விதமான முறைகளில் கணினியை அந்நிரல் தாக்கவேண்டும் என்று அதில் எழுதியுள்ளார்களோ அதன்படி அந்த நிரல்கள் செயல்படும் எடுத்துக்காட்டக நான் ஒரு கிருமிநிரலை எழுதுகிறேன். அதில், அந்த நிரல் கோப்புகளை பிரதி எடுக்கும்பொழுது அது கணினியில் இருந்து நெகிழ்தட்டுக்கும், அதிலிருந்து கணினிக்கும் செல்வதற்காக கட்டளைகளை அமைக்கிறேன். அதுமட்டுமல்லாது அந்நிரல், கணினி வினைக்கலனை தனது நினைவகத்தில் ஏற்றியவுடன் செயல்பட்டு அதாவது தன்னைத்தானே கணினியின் இராம் நினைவகத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கணினியின் தேதியை கவனித்துவருமாறும் கட்டளைகளை அமைக்கிறேன். அவ்வாறு கணினியின் தேதியைக்கவனித்து வரும் அக்கிருமிநிரல் மே மாதம் 5 ஆம் தேதி கணினியின் தேதியாக வரும் நேரத்தில் அதில் உள்ள தகவல்களை (format) மொத்தமாக அழிக்கும் கட்டளையைக்கொடுக்கிறேன்.

இதுதான் ஒரு கிருமிநிரல் செய்யும் வேலை. இங்கு நான் கணினியின் தேதியை கவனித்து அதில் நான் கொடுக்கும் தேதி வந்தால் அது தனது வேலையைச் செய்யக் கட்டளையிட்டிருப்பது போல பல வல்லுனர்கள் பலவிதமாக கட்டளையிடுகின்றனர். இத்தகைய கிருமிநிரல்கள் அதை எழுதும் வல்லுனரைப்பொருத்து வேறு வேறு விதமாக அமைகின்றன, வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன.

இத்தகைய கிருமிநிரல்களை நாம் பொதுவாக இரண்டுவகையாகப்பிரிக்கிறோம் அவை

1. (File Virus)கோப்புகளைத்தாக்கும் கிருமிகள்

2. BootSector மற்றும் Partition Table கிருமிகள்

இவற்றில் கோப்புகளைத்தாக்கும் கிருமிகள், நிரல்களையும் தகவல் கோப்புகளையும் தாக்கி அழிக்கின்றன.இன்னும் நமது கணினியில் பயன்படுத்தும் நெகிழ்வட்டு(floppy) மற்றும் வண்தட்டு(Hard disk) போன்றவட்டில் நாம் பதிந்துவைத்துள்ள கோப்புகளின் சரியான முகவரி, மற்றும் அந்த hard disk எத்தனையாகப்பிரிக்கப்பட்டுள்ளது அந்த ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு கொள்ளளவு போன்ற தகவல்கள் இந்த Boot Sector மற்றும் Partition table போன்றவற்றில் உள்ளன. இவைகளைக் கிருமி நிரல்கள் தாக்குவதால் நாம் அந்த Hard diskல் உள்ள மொத்த சேமிப்புகளையும் இழந்துவிடுவோம்.

தற்காலத்தில் பல புதிய வகைக்கிருமி நிரல்கள் பரவுகின்றன. அவை மேற்கூறிய வகையில் செயல்படுவதோடு, இணையத்தின் வாயிலாக Credit Card Numbersகள் மற்றும் கடவுசொற்கள் (Passwords) போன்றவற்றை கவர்ந்து செல்வதற்கும் எழுதப்படுகின்றன.

ஒருவகை கிருமி நிரல்களை நாம் 'த்ரோசான் குதிரைகள் ' என்று கூறுகிறோம் இவை கிருமிநிரல்களை ஒவ்வொருகணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச்செய்கின்றன இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது Credit card Numberகளைத்தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்கின்றன சில சயம்களில் இணையவங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சொற்களையும் எடுத்து வைத்துக்கொள்கின்றன பின்னர் அவைகளத் தனது எஜமானனுக்கு(Owner of that virus) இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.

கிருமிநிரல்களை நமது கணினியில் நுலைந்து விடாமல் தடுப்பது எப்படி ?

சில முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அவைகளாவன

1. பிறரிடமிருந்து வாங்கிப்பயன்படுத்தும் Floppy disk, CD போன்றவைகள் முறையாக சோதித்த பின்னரே உபயோகிக்கவேண்டும்.(முடிந்த அளவுக்கு அவைகளைத்தவிர்க்க வேண்டும்.)

2. வேண்டாத விளையாட்டு மென்கலன்களை(Software) இலவசமாகக் கிடைக்கிறதே என்று இணையத்தில் இருந்து இறக்கிக்கொளவதோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி உபயோகிப்பதோ கூடாது.

3. முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி கிருமிச்சோதிப்புக்கு உடப்டுத்தவேண்டும்.

4. மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் தமக்கு வேண்டியவரா இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். இவைகள் பெரும்பாலும் கிருமி நிரல் களைத்தாங்கி வரப்பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் இத்தகைய கிருமிநிரல்களை அழிப்பதற்கு அல்லது தடை செய்வதற்கு என்று கிருமி அழிப்பான்கள் கிடைக்கின்றன. இந்த கிருமி அழிப்பான்களை நாம் நமது கணினியில் பதிந்து வைத்துக்கொண்டு அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் இங்கு பல விசயங்களை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன

எல்லா கிருமிநிரல்களையும் எல்லா கிருமிஅழிப்பான்களும்(Antivirus Programs) அழித்துவிடுவதில்லை காரனம் ஏற்கனவே வந்த ஒரு கிருமிநிரலுக்குத்தான் அதை அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமிநிரல்களுக்கு நாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரனம் ஒவ்வொரு கிருமி எழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளை நன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்து தான் அதற்கு அழிப்பான்கள்(vaccines) எழுதப்படுகின்றன.

ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லை எனவே அடிக்கடி உங்களது கிருமிஅழிப்பான் மென்கலன்களை புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இன்னுமொரு விசயம் இந்த கிருமி அழிப்பான் மென்கலன்களை எழுதுபவர்கள் பல கிருமிநிரல்களை புதிதுபுதிதாக உலவவிடுகிறார்கள். அதன்பின் அதற்காண அழிப்பானைதயார்செய்து விற்பனை செய்துவிடுகிறார்கள். அந்த சம்யத்தில் வேறு புதிய கிருமிகளை வெளியே அனுப்புகின்றனார்.

ஒரு கிருமியை எழுதியவருக்கு அது எவ்வாறு செயல்படும் என்பது தெரிந்துவிடுவதால் அதனை அழிக்க எழிதில் அழிப்பனை உருவாக்க முடியும். அதேசமயத்தில் ஒரு புதிய கிருமிநிரலை எடுத்துக்கொண்டு அது எவ்வாறெல்லாம் தாக்குகிறது, பரவுகிறது எனபதை நன்கு ஆய்ந்து அதனை அழிப்பதற்கு, தடுப்பதற்கும் நிரல்களை உருவாக்குவது கடினமான பணி.
thanks to thinnai.com

பால்மய வீதி சூரிய காலக்ஸி



>
பால்மய வீதி சூரிய காலக்ஸி !
பரிதி மண்டலக் கோள்கள்
உருண்டோடும்
விளையாட்டுச் சந்தை !
பரிதி அங்கோர் வெள்ளாடு !
குடை ராட்டினம் போல்
கோள்கள் சுற்றிவர
வெய்யோன்
மையக் கனலை வணங்கி
வலம்வரும்
ஒளிமயமான மந்தை !
பூமி சிறியது !
பூமி சுற்றும் சூரியன் சிறியது !
சூரியன் சுற்றி வரும்
பால்மய வீதிப்
பூதக் காலக்ஸி சிறியது !
கோடான கோடி
ஒளிமய மந்தைகள் மேய்ந்து
உந்திச் செல்லும்
பிரபஞ்சக் குமிழிதான் பெரியது !

”புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.”

ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)

பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ



1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.


காலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்

காலக்ஸி என்றால் என்ன ? சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

காலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் (Andromeda Galaxy) சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.



குடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக்கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே ! பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும் (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன !

பால்மய வீதி காலக்ஸியின் தனித்துவச் சிறப்புகள்

நமது பரிதி மண்டலம் சுற்றிவரும் பால்மய வீதி என்பது ஒருவிதச் சுருள் காலக்ஸியே (Spiral Galaxy). தீபாவளி சுருளாழி மத்தாப்பு போல் சுழல்வது. பால்மய வீதியின் விட்டம் சுமார் 100 ஆயிரம் ஒளியாண்டு தூரம் (One Light Year : ஓர் ஒளியாண்டு என்பது தூர அளவு : அதாவது விநாடிக்கு 186,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி ஓராண்டு செல்லும் தூரம்). மையக்கண்ணின் தடிப்பு ஈராயிரம் ஒளியாண்டு தூரம். மையக்கண்ணில் பழைய விண்மீன்களும் ஒரு கருந்துளையும் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பால்மய வீதியைச் சுற்றிலும் ஓர் “ஒளிவட்டம்” (Halo) விண்மீன் கொத்துக்களாலும் (Band of Star Clusters), கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்ட மேகத்தாலும் (Cloud of Dark Matter) அமைக்கப் பட்டுள்ளது ! அந்த சுருள் ஆழியில் நான்கு கரங்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக் கணக்கான விண்மீன்கள் தோரணங்களாய்ப் பின்னிய நான்கு கரங்களைத் தாங்கி பால்மய காலக்ஸி தன் மையத்தைக் கொண்டு சுற்றி வருகிறது !



பரிதி மண்டலம் நான்கு கரங்களில் ஒன்றான ஓரியன் கரத்தில் (Orion Arm) மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! நமது பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல், சூரியனும் பால்மய வீதியின் மையத்தை விநாடிக்கு 137 மைல் வேகத்தில் (220 கி.மீ./விநாடி) சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் சூரியன் ஒருமுறை முழுவட்டம் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப் படுகிறது !

விண்முகில் எனப்படும் நிபுளாக்கள் (Nebulae) என்றால் என்ன ?

1924 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் முதன்முதல் ஒரு சுருள் வடிவான நிபுளாவைக் கலிஃபோர்னியா வானோக்ககத் தொலைநோக்கியில் கண்டார். நிபுளா என்றால் முகில் என்பது பொருள். அகிலத் தூசிகள், அண்டவெளி வாயுக்கள் சீர்குலைந்த விண்மீன்களில் சிதறிப்போய்க், காட்சி முறையில் கையாளப்படும் ஒரு சொல் நிபுளா ! சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் ! சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர்வீசுபவையாக, பிரதிபலிப்பவையாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே ! தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப் பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன ! உதாரணமாக ஓரியன் நிபுளாவில் (Orion Nebula) ஹைடிரஜன் வாயுள்ள ஒருவிதப் பச்சை நிற முகில் தெரிகிறது.



பிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்

பிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.

தந்தையைப் பின்பற்றி 20 அடி, 40 அடி குவிநீளத் தொலைநோக்கிகளில் வானைக் கண்ணளாவித் தனயன் ஜான் ஹெர்ச்செல் புரிந்த பணிகள் அநேகம். தென்னாப்பிக்காவின் தெற்குக் கோடியில் உள்ள நன்நம்பிக்கை முனையில் [Cape of Good Hope] பல்லாண்டுகள் தங்கி தென் மண்டல விண்கூரையைத் [Southern Celestical Hemisphere] தொலைநோக்கியில் உளவு செய்து 3347 இரட்டை விண்மீன்களையும் [Double Stars], 2602 நிபுளாக்களையும் [Nebulae] கண்டு பிடித்தார். அவர் வெளியிட்ட முதல் நிபுளா அட்டவணையில் [First Catalogue of Nebulae] காணும் 5079 பால்மய ஒளிமீன் மந்தைகளில் தந்தையார், வில்லியம் ஹெர்ச்செல் கண்டவை 2477. ஜான் கண்டவை: 2602.



மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நிழற்படத் துறையை [Photographic Works] வளர்ச்சி செய்த முன்னோடிகளில் முக்கிய படைப்பாளியாகக் கருதப்படுவர், ஜான் ஹெர்ச்செல். ‘·போட்டோகிரா·பி ‘ [Photography] என்னும் பெயரைப் படைத்தவர் அவர்தான். நிழற்படத் துறையில் ‘எதிர்ப்படநிழல் ‘, ‘நேர்ப்படநிழல் ‘ [Negative, Positive Films] என்னும் வார்த்தைகளைப் படைத்தவரும் ஜான் ஹெர்ச்செல்தான்!

ஜான் ஹெர்ச்செல் புரிந்த மகத்தான விஞ்ஞானப் பணிகள்

ஜான் ஹெர்ச்செல் 1792 இல் இங்கிலாந்து ஸ்லோவ் [Slough] என்னும் நகரில் பிரிட்டனில் குடிபுகுந்த ஜெர்மன் வில்லியம் ஹெர்ச்செலுக்குப் பிறந்த ஏக புதல்வன். கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பயின்று கணிதத் துறையில் 1816 இல் பட்டம் பெற்றார். ஒப்பற்ற வானியல் விஞ்ஞானிகளான தந்தை வில்லியம், அத்தை கரோலின் இருவராலும் ஜான் வளர்க்கப் பட்டார். அவர் இருவது அருகில் வளர்ந்த ஜான் ஹெர்ச்செல் வானியல் துறையில் வல்லமையும், தொலைநோக்கி மூலம் வானோக்கி உளவும் பயிற்சியும் பெற்றார். தந்தையாரைப் பின்பற்றி அவர் கண்டுபிடித்த பால்மய ஒளிமீன்களின் எண்ணிக்கையை மிகையாக்கி ஆயிரக் கணக்கான இரட்டை மீன்கள் [Double Stars], ஒளிமீன் மந்தைகள் [Star Clusters], நிபுளாக்கள் [Nebulae] ஆகியற்றைக் கண்டுபிடித்தார். முதலில் (1864) வெளிவந்த நிபுளா, விண்மீன் திரட்சி பொது அட்டவணையில் [General Catalogue of Nebulae & Clusters] ஜான் ஹெர்ச்செல் மற்றும் தந்தையார் வில்லியம் ஹெர்ச்செல் இருவரும் கண்டவை 3347 இரட்டை விண்மீன்கள்; 2400 நிபுளாக்கள்.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த ஜான் ¦†ர்ச்செல் எவ்விதக் கல்வித் துறையிலும் பதவி ஏற்காமல் வாழ்நாள் முழுதும் வான்வெளி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அவரது கல்லூரி கணித ஆசிரியர், உட்ஹவுஸ் [Woodhouse] என்பவர். நியூட்டன் ஆக்கிய கால்குலஸ் [Calculus] போலின்றி சற்று எளிதான லெப்னிட்ஸ் [Leibnitz] படைத்த, கால்குலஸ் அணுகுமுறைக் கணிதத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் உட்ஹவுஸ்! கேம்ப்ரிட்ஜ் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஏனோ லெப்னிட்ஸின் கால்குலஸ் அணுகு முறைகள் சேர்க்கப் படவில்லை. ஜான் தனிதாகத் தானாகப் படித்து அவ்வித எளிதான கால்குலஸ் அணுகு முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1813 இல் கணிதத்தில் முதல்வராகத் தேறி முதல்நிலைப் பட்டம் பெற்றார்.



‘கோட்டே தேற்றத்தின் மகத்தான விளைவுப்பயன் ‘ [On a Remarkable Application of Cotes's Theorem] என்னும் கணித விளக்கவுரையை எழுதி, ராயல் சொஸைட்டியின் ·பெல்லோ [Fellow of Royal Society] ஆனார். 1820 இல் இரண்டு ‘முடிவுறும் வேறுபாடுகளின் பயன்கள் ‘ [Applications of Finite Differences] என்னும் கணிதச் சிறப்பு நூல்களை வெளியிட்டார். 1820 ஆண்டுகளின் முடிவில் கணித ஆய்வுகளிலிருந்து விலகி, ஜான் ஹெர்ச்செல் தன் முழு ஆர்வத்தையும் வானியல் துறையில் [Astronomy] மூழ்க்கினார்.

ஜான் ஹெர்ச்செல் வானியல் ஆய்வுத் துறையில் நுழைவு

78 ஆவது வயதில் [1816] தந்தை வில்லியம் ஹெர்ச்செல் வானியல் பணியில் தளர்ச்சி யுற்றதும், ஜான் ஹெர்ச்செல் அப்பணியை அவர்சார்ப்பில் தொடர்ந்தார். 1822 இல் வில்லியம் காலமானதும்,அத்தை கரோலின் மீண்டும் ஹானோவர், ஜெர்மனிக்குச் சென்றார். அந்த ஆண்டில்தான் ஜான் ஹெர்ச்செல் சந்திர கிரகணத்தைப் புதிய முறையில் கணிக்கும் [Eclipses of the Moon] சிறியதோர் வானியல் விஞ்ஞான முதல் ஆய்விதழை வெளியிட்டார். ஆனால் அவரது முதற் பெரும் பதிப்பு என்று கருதப்படுவது: லண்டன் ராயல் சொஸைடி வெளியிட்ட ‘இரட்டை விண்மீன்களின் அட்டவணை’ [Catalogue of Double Stars (1824)]. வில்லியம் ஹெர்ச்செல்லைப் போல், ஜானும் ஆழ்வெளியில் அதிதூரத்தில் நகரும் விண்மீன்களின் [Deep Space Distant Stars] போக்கை நோக்கி வந்தார். தொலை விண்மீன் ஒன்றின் ‘இணைத்திரிபு இடஅமைப்பைக் ‘ [Parallax of a Star] கணிக்க முயன்றார். அப்போது இரட்டை விண்மீன்கள் யாவும் ஓர் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரக் கண்டு, அவற்றின் சுற்றுவீதிகளைக் [Orbits] கணிக்க, முதன்முதல் கணித முறைகளை வகுத்தார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொஸைடி அப்பணிக்குத் தனது ராயல் தங்கப் பதக்கத்தை அளித்தது.



1834-1838 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனையில் [Cape of Good Hope] தங்கி தென்னக விண்கூரையை [Southern Hemisphere] நோக்கி உளவு செய்து, பால்மய விண்மீன்கள், நிபுளாக்கள் ஆகியற்றைப் பதிவு செய்தார். அங்கே தான் கொண்டுவந்த 20 அடி குவிநீளத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வான்குடையை ஆய்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க வானில் அவர் கண்ட விந்தைகள்: 1835 இல் திரும்பி பூமி நோக்கி வந்த ஹாலியின் வால்மீன் [Halley 's Comet, Edmund Halley (1656-1742)] அவரது தொலைநோக்கியின் கண்ணில் பட்டது. வால்மீன்களின் விந்தையான போக்குகளை ஆராய்ந்த போது ஈர்ப்பு விசையைத் தவிர வேறு பலதீவிர விசைகளும் அவற்றின் போக்கைப் பாதிக்கின்றன என்று அறிந்தார். பரிதியிலிருந்து வால்மீனை அப்பால் விரட்டும் விசையை அவரால் கணித முறையில் வகுக்க முடிந்தது. அப்போதுதான் ஜான் ஹெர்ச்செல் முதன் முதல் பரிதிக் காற்றைப் [Solar Wind] பற்றிக் கண்டுபிடிக்க ஏதுவாயிற்று! வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்திலிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே!



1847 இல் தென்னாப்பிரிக்காவில் தான் கண்டுபிடித்த வானியல் விந்தைகளை நூலாக வெளியிட்டு, லண்டன் ராயல் சொஸைடியின் இரண்டாவது கோப்லே தங்கப் பதக்கத்தைப் [Copley Medal] பெற்றார்.

ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நிபுளாக்கள்

ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.



ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

நிபுளாக்கள் என்பவை யாவை ? காலக்ஸிகளை உற்பத்தி செய்யும் மூல ஒளிமய முத்துக்களைக் [Materials that form Galaxies] கொண்ட, அல்லது காலக்ஸி விண்மீன் மந்தைகளைப் பெற்ற ஒளிமுகில் கூட்டம்! அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது! எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன ?’ நிபுளா ‘: நிபுளா [Nebula] என்னும் சொல்லுக்கு ‘முகில் ‘ [Cloud] என்று அர்த்தம். அண்டக் கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் [Planets, Comets, Astroids] தவிர ஏனைய வானியல் ஒளித்தீவுகள், ஒளி மந்தைகள் யாவும் முதலில் ஒரு சமயம் நிபுளாக்கள் என்று குறிப்பிடப் பட்டன. அப்பழைய அர்த்தத்தில் இன்னும் சில வானியல் நூல்கள் நிபுளா என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருவதில் குழப்பம் உண்டாகலாம்!



சில சமயம் காலக்ஸிகள் [Galaxies (M51)], விண்மீன் மந்தைகள் [Star Clusters], அகிலவெளி மீனொளி வாயு/தூசி முகில்கள் [Intersteller Gas/Dust Clouds] ஆகியவற்றை நிபுளாக்கள் என்று குறிப்பிடுகிறோம். துல்லியமாகக் கூறப்போனால் விண்மீன் மந்தைகளைக் குறிப்பிடாது ‘நிபுளா ‘என்னும் சொல் வாயுமயம் அல்லது தூசிமயம் கொண்ட ‘முகிலுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மையாக நிபுளாவின் முகிலில் இருப்பது ஹைடிரஜன் வாயு!

மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை! அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை! குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது! ‘திறந்த விண்மீன் மந்தைகள் ‘ [Open Clusters (M44)]: சிதறிய முத்துக்களைப் போல் தெரிபவை இவை. நூற்றுக் கணக்கான புதிய விண்மீன்களைக் கொண்டவை. அவை யாவும் ஈர்ப்பு விசைகளால் சேர்க்கப் பட்டு, குறுகிய காலத்தில் பிரிந்து சென்று பிரகாசிப்பவை. காலக்ஸி விண்மீன் மந்தைகள் [Galactic Clusters] என்றும் அழைக்கப்படுபவை. 50 ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த தொலைவில் இருப்பவை.



பேரளவு உஷ்ண வாயு மண்டிய முகிலே ஒளி உமிழும் நிபுளாக்களாய் மிளிர்கின்றன. அண்டையில் புறவூதா ஒளியை [Ultra-violet Light] வீசும் விண்மீன் ஒன்றால், நிபுளாவின் முகிலில் உள்ள அணுக்கள் சக்தி பெற்றுக் கீழ் நிலைச் சக்திக்குத் தாவும் போது, நியான் மின்விளக்கு [Neon Light] போல வெளிச்சத்தை உமிழ்கின்றன! பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன! அதற்குக் காரணம், ¨ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம்! மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது! புதிதாய்த் தோன்றிய விண்மீன் அல்லது தோன்றப் போகும் விண்மீன் அண்டவெளித் தளங்களில்தான், பொதுவாக ஒளிசிந்தும் நிபுளாக்களைக் காண முடிகிறது.

‘எதிரொளிக்கும் நிபுளாக்கள் ‘ [Reflection Nebulae (NGC 7023)]:

பொதுவாக நீல நிறத்தில் தோன்றுபவை இந்த வகையான நிபுளாக்கள்! அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை! பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது! பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன! ஆதலால் அந்த இரண்டு நிபுளாக்களையும் ‘மலர்ச்சி நிபுளாக்கள் ‘ [Diffuse Nebulae] என்றும் குறிப்பிடுகிறார்கள்.



‘கரிய நிபுளாக்கள் ‘ [Dark Nebulae (NGC 2264)]:

பின்புறம் அடிக்கும் ஒளியைத் தடுத்து வருவதால், இந்த நிபுளாக்கள் கரிய நிபுளாக்கள் போலக் காட்சி அளிக்கின்றன! நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்படுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும்! அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது! கரிய நிபுளாக்கள் பொதுவாக மலர்ச்சி நிபுளாக்களின் அருகே காணப்படுகின்றன!

‘அண்டக்கோள் நிபுளாக்கள் ‘ [Planetary Nebulae (M57)]:

விண்மீன் தனது இறுதிக்கால நிலையில் வீசி எறிந்த வாயுக் கோளமே, அண்ட நிபுளா வென்று அழைக்கப் படுகிறது! நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம்! அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது! தொலைநோக்கியில் பார்க்கும் போது அண்டங்கள் போல் தோன்றலாம். அவ்வளவுதான். சாதாரணமான ஓர் அண்டக்கோள் நிபுளா ஓர் ஒளியாண்டு தூரத்துக்கும் குறைவான அகலத்தில்தான் உள்ளது!



‘சூப்பர்நோவா மிச்சங்கள் ‘ [Supernova Remnants (M1)]:

பூத வடிவான விண்மீன் ஒன்று மரணம் அடையும் போது, பேரளவு ஒளிப்பிழம்புடன் பிரகாசித்துப் பரவிச் சிதறும்! அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது! சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது! அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி! அம்மிச்சப் பகுதியின் அகலம் ஒரு சில ஒளியாண்டுகளே!


வானியல் மேதை ஜான் ஹெர்ச்செலின் மறைவு

ஜான் ஹெர்ச்செல் வெளியிட்ட ‘இயற்பியல் வேதாந்தத் தெளிவுரை ‘ [Discourse on Natural Philosophy] என்னும் நூலைப் படித்து, மைக்கேல் ·பாரடே [Michael Faraday (1791-1867)] அவரது ஞான வல்லமையைப் புகழ்ந்து கூறியது: ‘இயற்பியல் வேதாந்த நூலைப் படித்து இன்புற்ற பலருள் நானும் ஒருவன். அந்நூல் வேதாந்த மாணவருக்கு ஒரு பாடப் பதிப்பாக உதவத் தகுதி பெற்றது. அந்நூல் என்னைச் செம்மையான ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆக்கியது. என் ஒழுக்கப் பண்பை உயர்த்தியது. சொல்லப் போனால் என்னைச் சிறந்த சித்தாந்த வேதாந்தி யாக்கியது ‘.

ஜான் ஹெர்ச்செல் காலத்து விஞ்ஞானிகள் அனைவரிலும் அவர் முன்னணியில் நிற்கும் மேதையாகக் கருதப்படுபவர். 1871 ஆம் ஆண்டில் காலமான ஜான் ஹெர்ச்செல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கவுரையில் பிரென்ச் கணித நிபுணர் ஷான் பயாட் [Jean Biot (1774-1862)] கூறியது: ‘கணித மேதை லாப்பிளாஸ் [Laplace] 1827 ஆண்டில் மரணம் அடைந்த பின், அவருக்குப் பிறகு இணையாக மதிக்கப் படுபவர், ஜான் ஹெர்ச்செல். பிரிட்டனில் ஸர் ஐஸக் நியூட்டன் மறைவுக்குப் பிறகு, ஜான் ஹெர்ச்செல்லின் மரணமே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாக நான் கருதுகிறேன்!’

THANKS TO MR. சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



+++++++++++

தகவல்கள்:

1. Results of Astronomical Observations of John

சனி, மார்ச் 14, 2009

டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு

டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு

ரிச்சர்ட் டாக்கின்ஸ்





ரிச்சர்ட் டாக்கின்ஸின் 'ஏடனிலிருந்து பெருகும் நதி ' என்ற புதிய புத்தகத்திலிருந்து சில பகுதிகள்


இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற எல்லா தாவரங்களும், மிருகங்களும், காளான்களும், ஊர்வனவும், இந்த வார்த்தைகளை படிக்கும் வாசகர்களும் தங்களது முன்னோர்களை திரும்பிப்பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பெருமைப்படலாம். நமது முன்னோர்களில் ஒருவர் கூட குழந்தைப்பருவத்திலேயே இறக்கவில்லை. ஒவ்வொருவரும் வளர்ந்து பெரியவர்களாகி வெற்றிகரமாக காதலித்து குழந்தையை உருவாக்கினார்கள். நமது ஒரு முன்னோரும், ஒரே ஒரு குழந்தையையாவது இந்த உலகத்துக்கு தருவதற்கு முன்னர், எதிரியால் வீழ்த்தப்படவில்லை, அல்லது வைரஸால் சாகவில்லை, அல்லது தவறாக ஒரு மலைவிளிம்பிலிருந்து கால்வைத்து கீழேவிழுந்து இறக்கவில்லை. நம் முன்னோர்களின் ஆயிரக்கணக்கான கூட்டாளிகள் இந்த அத்தனைவிஷயங்களில் ஒன்றிலாவது இறந்தார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் கூட இந்த தவறுகளில் ஒன்றைக்கூட செய்யவில்லை. யோசித்துப்பாருங்கள். உங்கள் முன்னோர்களில் ஒரே ஒருவர் குழந்தையில்லாமல் இறந்திருந்தால்கூட நீங்கள் இங்கே இதைப்படித்துக்கொண்டிருக்க முடியாது. நாம் இங்கே இந்த வார்த்தைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவாகத் தெரிந்தாலும், இதிலிருந்து ஏராளமான விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றன. ஏராளமான விஷயங்களை இவை விளக்குகின்றன, ஏராளமாய் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.


எல்லா உயிரினங்களும் தங்களுடைய வெற்றிகரமான முன்னோர்களிடமிருந்து மட்டும் ஜீன்களைப் பெறுவதால், எல்லா உயிரினங்களும் வெற்றிகரமான வெற்றிக்குரிய ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இந்த உயிரினங்கள் இன்னொரு உயிரினங்களுக்கு முன்னோர்களாக இருக்க எல்லா தேவையான ஜீன்களையும் கொண்டிருக்கின்றன. அதாவது உயிர்வாழ்வதற்கும், பல்கிப்பெருகுவதற்கும். அதனாலேயே எல்லா உயிரினங்களும் நன்றாக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தை (உடலை) கட்டமைக்க தேவையான ஜீன்களைக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே பறவைகள் பறப்பதை சிறப்பாகச் செய்கின்றன. மீன்கள் நீந்துவதை சிறப்பாகச் செய்கின்றன. குரங்குகள் மரமேறுவதை சிறப்பாகச் செய்கின்றன. வைரஸ்கள் பரவுவதைச் சிறப்பாகச் செய்கின்றன. அதனாலேயே நாம் வாழ்க்கையையும், செக்ஸையும், குழந்தைகளையும் விரும்புகிறோம். இது ஏனெனில் நாம் எல்லோரும், ஒரு ஆள் பாக்கி இல்லாமல், எல்லோரும் வெற்றிகரமான முன்னோர்களிடமிருந்து, உடையாத முன்னோர் வழியிலிருந்து, ஜீன்களைப் பெற்றிருக்கிறோம். முன்னோர்களாக இருக்கமுடியும் உயிரினங்களால் இந்த உலகம் நிரம்பி இருக்கிறது. ஒரே வரியில் சொன்னால் இதுதான் டார்வினிஸம்.


ஏடனிலிருந்து ஒரு நதி புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இது காலத்தில் ஓடுகிறது, வெளியில் ஓடவில்லை. இது டி என் ஏ நதி. எலும்புகளின் அல்லது சதைகளின் நதி அல்ல. இது செய்திகளின் நதி. எப்படி நல்ல உடலைக் கட்டுவது என்ற விவரங்களைத் தாங்கி ஓடிவரும் செய்தி நதி. உடல்களால் ஆன நதி அல்ல இது. இந்த செய்தி நமது உடலுக்குள் சென்று அவைகளை பாதிக்கிறது. ஆனால் உடலால் இந்த செய்திகள் பாதிக்கப்படுவதில்லை.


நல்ல தோழர்கள் போல பழங்காலத்திலிருந்து இன்றுவரை வெற்றிநடை போட்டு வருவது போல இந்த ஜீன்களின் ஆறு ஓடி வருகிறது. கலப்புறவு கொண்டு மக்களை பெருக்கும் எந்த ஒரு மக்கள்தொகையின் ஜீன்களும், நீண்டகாலத்தில், ஒவ்வொரு ஜீனுக்கும் இன்னொரு ஜீன் தோழனாக இருக்கிறது. குறுகிய காலத்தில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு உடல்களில் தங்கி அதே உடலில் இருக்கும் மற்ற ஜீன்களின் தோழனாக இருக்கிறது.


(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: உதாரணமாக புலியின் பல் என்பது ஒரு 10 ஜீன்களைப் பொறுத்து இருக்கிறது என்று கொள்ளலாம். எல்லாப்புலிகளின் பல் ஜீன்களும் மொத்தம் 15 ஜீன்கள் என்றும் கொள்ளலாம். ஆகவே இந்த 15 ஜீன்களின் permutation பத்து பத்து ஜீன்களாக பல்வேறு புலிகளில் இருக்கின்றன. ஆகவே ஒரு புலியின் பல் சற்று கோணல்மாணலாக இருக்கிறது. ஒரு புலியின் பல் நேராக இருக்கிறது. புலியின் கிழிக்கும் பற்கள் கூர்மையாக இருக்கின்றன. ஒரு புலியின் கிழிக்கும் பற்கள் அவ்வளவு கூர்மையாக இல்லை என்றாலும் நன்றாகவே மானின் தோலைக் கிழிக்கின்றன. ஆகவே, இந்த 15 ஜீன்களும், புலியின் ஜீன் ஆற்றில், காலநதியில் புலிகளின் பிள்ளைகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன)


நல்ல உடலைக் கட்ட உதவும்போதும், அந்த நல்ல உடல் அதனது சுற்றுப்புறத்தில் நன்றாக வாழவும், அந்த இனம் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழியில் பல்கிப்பெருகவும் முடியும்போதே அந்த ஜீன்கள் யுகங்கள் யுகங்களாக வாழவும் முடியும். ஆனால், இதில் இன்னும் பெரிய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு ஜீன் வாழ்வதற்கு, அந்த ஜீன் அந்த உயிர் இனத்தில் இருக்கும் மற்ற ஜீன்களுடன் சேர்ந்து வேலைசெய்யக்கூடிய விஷயம் பெற்றிருக்க வேண்டும். நீண்டகாலம் ஒரு ஜீன் வாழ்வதற்கு அந்த ஜீன் ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும். அது அந்த ஆற்றில் இருக்கும் மற்ற ஜீன்களுடன் தோழமையுடனும் அந்த ஜீன்களின் பின்னணியிலும் நன்றாக வேலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.


மற்றொரு உயிரினத்தின் ஜீன்கள் மற்றொரு நதியில் இருக்கின்றன.


ஒரு உயிரினத்தில் இருக்கும் எல்லா உயிர்களுக்குள்ளும் ஒரே ஒரு ஜீன்கள் ஆறு ஓடுகிறது. அந்த ஜீன்கள் அந்த உயிரினத்தில் இருக்கும் மற்ற ஜீன்களுடன் தோழமையாக இருக்க தயாராக இருக்கின்றன. இருக்கும் ஒரு உயிரினம் இரண்டாக பிரியும்போது இன்னொரு உயிரினம் தோன்றுகிறது. அதாவது அந்த உயிரினத்தின் ஜீன்களின் ஆறு காலவெளியில் இரண்டாகப் பிரிகிறது. ஒரு ஜீனின் பார்வையில், இந்த speciation என்னும் புதிய உயிரின உருவாக்கம், ஒரு 'பிரியாவிடை '. ஒரு குறுகிய கால அரைகுறை பிரிவுக்குப் பின்னர், இரண்டு நதிகளும் தனித்தனி வழியில் எப்போதும் செல்கின்றன. அல்லது ஒரு பிரிவு கால மணலுக்குள் காய்ந்து வற்றிப்போகும் வரை.


கரைகளுக்குள் பாதுகாப்பாக, இந்த நதி நீர், பாலுறவால் தொடர்ந்து கலந்து, மறுபடியும் கலந்து ஓடுகிறது. ஆனால் எப்போதும் தண்ணீர் தன் கரைகளைத் தாண்டி இன்னொரு நதியை களங்கப்படுத்துவதில்லை. ஒரு உயிரினம் தனியாகப் பிரிந்த பின்னர் இந்த இரண்டு ஜீன் குழுக்களும் மற்ற ஜீன் குழுவில் இருக்கும் ஜீன்களின் தோழர்களாக இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவைகள் இனிமேல் ஒரே உடலில் சந்திக்கப் போவதில்லை. எனவே அவைகள் தோழமையோடு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.


இன்றைக்கு டி என் ஏ நதிக்கு, சற்றேரக்குறைய 3 கோடி கிளைகள் இருக்கின்றன. அதுதான் உலகத்தில் இருக்கும் தனித்தனி இனங்களின் எண்ணிக்கை. இன்னும் ஒரு விஷயம். இன்றைக்கு இருக்கும் இனங்களின் எண்ணிக்கை இதுவரை உலகத்தில் தனி இனங்களாக இருந்த இனங்களின் எண்ணிக்கையில் சுமார் 1 சதவீதமே என்பது. இதிலிருந்து நாம் இதுவரை இந்த டி என் ஏ நதிக்கு சுமார் 300 கோடி கிளைகள் இருந்திருக்கின்றன என்பதையும் அறியலாம். இன்றைக்கு இருக்கும் 3 கோடி கிளைகள் திரும்பிபோகமுடியாதபடிக்கு தனியானவை. இவைகளில் பெரும்பாலும் வற்றிப்போய் காணாமல் போகும். ஏனெனில் பெரும்பாலான இனங்கள் மறைந்துவிடுவதுதான் இயற்கை. இந்த 3 கோடி கிளைகளை காலத்தில் பின்னோக்கி சென்று பார்ப்போமானால், நாம் இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னால் சென்று இன்னும் ஒரு கிளை இணைந்து இன்னும் ஒரு நதியுடன் இணைந்து கொண்டே போவதைப் பார்க்கலாம். மனித ஜீன்களின் ஆற்றுக்கிளை மற்ற குட்டிபோட்டு பால்கொடுக்கும் இனங்களுடன் (எலிகள், பூனைகள், வவ்வால்கள், யானைகள்) போன்றவற்றுடன் இணைவதைப் பார்க்கலாம். அவையும் பின்னால் சென்று பறவைகளுடனும், ஊர்வனவுடனும், முதலைகளுடனும், மீன்களுடனும், முதுகெலும்பற்ற உயிரினங்களுடனும் இணைவதைப் பார்க்கலாம்.


ஃப்ரான்ஸிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்ஸன் என்ற இரண்டு பெரும் அறிவியலாளர்கள் ஜீனின் மூலக்கூறு அமைப்பை நமக்குச் சொன்னார்கள். இதற்காக நாம் அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ போன்றோரை கெளரவிப்பதுபோல அவர்களையும் கெளரவிக்க வேண்டும். அவர்களுக்கு கொடுத்த நோபல் பரிசு, 'மருத்துவம், உடலியல் ' போன்றவற்றுக்காக வழங்கப்பட்டது. அது முக்கியமல்ல. 1953இல் வெளிவந்த இந்த இரண்டு இளைஞர்களின் சிந்தனை, நமக்கு உயிர் பற்றிய சிந்தனையை புரட்சிகரமாக மாற்றியமைத்தது. வாட்ஸன்-கிரிக்குக்குப் பின்னர், மூலக்கூறு உயிரியல் டிஜிட்டலாக (கணிணி உபயோகப்படுத்தும் எண்கள் செய்தி போன்று புரிந்து கொள்ளப்படுதல்) ஆகிவிட்டது.


வாட்ஸனும் கிரிக்கும் நம்மை, ஜீன்களை பார்க்க வைத்தார்கள். அவைகளின் நுண்ணிய உள்ளமைப்புக்குள், அவை சுத்தமான டிஜிட்டல் செய்தியாக இருப்பதை நம்மை காணவைத்தார்கள்.


ஒரு கணிணி போல, கணிணியில் உபயோகப்படுத்தும் அடர்தகடு போல (compact disk) அவைகளுக்குள் இருக்கும் செய்திகள் வெறும் ஒன்று-சைபராக இருப்பது போல, இந்த ஜீன்களும் வெறும் டிஜிட்டல் செய்திகளாக இருப்பதை காண்பித்தார்கள். இந்த ஜெனடிக் குறியீடு, கணிணியில் இருப்பது போல இருஎண் குறியீடு (binary code) அல்ல. பல தொலைபேசிகளில் இருப்பது போல எட்டுஎண் குறியீடு அல்ல. ஆனால் நான்குஎண் குறியீடு (quaternary code). ஜீன்களுள் இருக்கும் இயந்திரக்குறியீடு, கணிணிபோலவே இருக்கின்றன. என்ன பெயர் நாங்கள் சொல்கிறோம் என்பதை விட்டுவிட்டால், ஒரு மூலக்கூறு உயிரியலின் கட்டுரையை அப்படியே கணிணியியல் கட்டுரையாகப் பார்க்கலாம்.


இதன் விளைவு, இந்த டிஜிட்டல் புரட்சி, உயிர் என்பது வெறும் டிஜிட்டல் செய்திதான் என்ற புரிதல், முன்பு இருந்த vitalism என்ற தேற்றத்துக்கு சாவு மணி அடித்துவிட்டது (vitalism என்பது உயிர்வாழும் பொருட்களும் உயிரற்ற பொருட்களும் அடிப்படையிலேயே வித்தியாசமான பொருட்கள் என்று சொல்வது). 1953 வரை, வாழும் புரோட்டோப்ளாஸம் அடிப்படையிலேயே, குறைக்க முடியாதபடி மர்மமானது என்பதை நம்ப முடியும். ஆனால் 1953க்குப் பின் அதுபோல நம்ப இயலாது. முன்பு உலகம் இயந்திரமயமானது என்று பேசிவந்த பழங்காலத் தத்துவவியலாளர்கள் கூட அவர்களது நம்பிக்கை இந்த அளவுக்கு நிரூபிக்கப்படும் என்று கனவில் கூட கருதியிருக்கமுடியாது.


இப்போது ஒரு அறிவியல் கதையை யோசிக்கலாம். இதில் பேசப்படும் தொழில்நுட்பம் இன்றைக்கு மிகவும் சாத்தியமானது. பேராசிரியர் ஜிம் கிரிக்ஸன் என்பவர் ஒரு தீய வெளிநாட்டு சக்தியால் கடத்தப்பட்டு, உயிரின போர் முறையை (biological-warfare) ஆராயும் பரிசோதனைச்சாலையில் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை செய்யவைக்கப்படுகிறார். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: உயிரின போர் முறை (biological-warfare) என்பது வைரஸ்கள், கிருமிகளை ஒரு குறிப்பிட்ட ஜீன் உள்ளவர்களை மட்டும் தாக்கும்படிக்கு மாற்றி அதை எதிரி நாட்டில் பரப்புவது. உதாரணமாக பொன்னிற தலைமுடி உள்ளவர்களை விட்டுவிட்டு கருப்பு நிறத் தலைமுடி உள்ளவர்களை மட்டும் தாக்கி அழிக்குமாறு ஒரு வைரசுக்கு சொல்லலாம்.) மீண்டும் கதை. உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், உலகத்துக்கு இந்த விஷயத்தையும், இன்னும் சில மகாரகசிய விஷயங்களையும் சொல்ல வேண்டும். ஆனால் எல்லா தொலைபேசி, கணிணி போன்ற தொடர்புச் சாதனங்கள் எல்லாம் அவரிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டன. என்ன செய்வது. ஒன்றே ஒன்று இருக்கிறது. டி என் ஏ குறியீடு 64 மூன்றெழுத்து குறியீடுஜீன்கள் (64 triplet 'codons, ') கொண்டது. ஆங்கில பெரிய எழுத்து சின்ன எழுத்து அப்புறம் எண்கள், இடைவெளி குறீயீடு, அப்புறம் ஒரு முழுப்புள்ளி எல்லாவற்றையும் இந்த 64குறியீடுகளில் போட்டுவிடலாம். பேராசிரியர் கிரிக்ஸன் ஒரு இன்ஃப்ளூயன்ஸா வைரஸை எடுத்து அதன் டி என் ஏவுக்குள் அவரது செய்தியை ஒரு முழு வாக்கியங்களாக எழுதி அந்த டி என் ஏவை மாற்றி, அப்புறம் அந்த செய்திக்கு முன்னர் வேறொரு அறிவியலாளரால் கண்டுபிடிக்க முடியக்கூடிய ஒரு விஷயத்தையும் (முதல் 10 வகுபடா எண்கள்) போட்டு தனக்குத்தானே அந்த இன்ஃபுளூயன்ஸா வைரஸையும் முகர்ந்து பார்த்து, சளிபிடித்து நிறைய காவலர்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெரும் தும்மல் போடலாம். ஃபுளூ உலகமே பரவும். எல்லா பரிசோதனைச் சாலைகளும் இந்த புது ஃபுளூவுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்க இதன் டி என் ஏ ஆராய்ச்சியில் ஈடுபடும். அப்போது இந்த ஃபுளூவுக்குள் இருக்கும் தொடர்ந்து வரும் வினோத செய்தி (தொடர்ந்து வரும் வகுபடா எண்கள்) எல்லோராலும் படிக்கப்பட்டு விடும்.


நமது ஜெனடிக் அமைப்பு, உலகம் முழுவது இருக்கும் உயிர்களின் அடிப்படை அமைப்பு, அடித்தளம் வரை டிஜிட்டல் அமைப்பு. ஒரு பெரிய புத்தகத்தை இந்த டி என் ஏ வில் இருக்கும் குப்பை டி என் ஏ ( 'junk ' DNA என்று இப்போது அழைக்கப்படுகிறது. ஆனால் இப்போது புரிந்துகொள்ளப்படாத இடம் என்று கொள்ளலாம்) என்று அழைக்கப்படும் இடத்தில் வார்த்தை வார்த்தை மாறாமல் எழுதிவிடலாம். நமது ஒவ்வொரு செல்லிலும் 715மெகாபைட் அளவுக்கு விஷயம் இருக்கிறது. இந்த விஷயத்தை பல படிக்கும் புரோட்டான்கள் படித்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நமது செல்களில் இருக்கும் நாடாக்கள் (க்ரோமசோம்கள்) எல்லா செல்களிலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் படிக்கும் புரோட்டான்கள் நாடாவில் வெவ்வேறு பக்கத்தைப் படிக்கின்றன. அவைகளுக்குத் தேவையான வெவ்வேறு செய்திகளை பெறுகின்றன. அதனாலேயே சதை செல்கள், ஈரல் செல்களிலிருந்து வேறாக இருக்கின்றன வேறு வேலைகளைச் செய்கின்றன. இங்கே ஆவி நடத்தும் உயிர்ச்சக்தி இல்லை. மர்மமான உயிர் மறைந்து நின்று காரியம் நடத்தவில்லை. வெறும் பைட் பைட்டாக டிஜிட்டல் செய்திதான்.


ஜீன்கள் சுத்தமான செய்திகளைக் கொண்டிருக்கின்றன. இந்த செய்திகள், எந்தவிதமான மாறுபாடும், குறைபாடும் இன்றி மீண்டும் மீண்டும் படிக்கவும், மீண்டும் மீண்டும் எழுதவும், மீண்டும் மீண்டும் பிரதி எடுக்கவும் இயலும் செய்திகள். சுத்தமான செய்தி பலபடி பிரதி எடுக்க இயலும் காரணம் இது டிஜிட்டல் செய்தியாக இருப்பதால் தான். பிரதி எடுப்பதில் சுத்தம் தெளிவாக இருக்க முடியும். நவீன பொறியியலாளர்கள் செய்வதற்கு போட்டியாக, டி என் ஏ எழுத்துக்கள் அட்சரசுத்தமாக பிரதி எடுக்கின்றன. தலைமுறை தலைமுறையாக பிரதி எடுக்கின்றன. எப்போதாவது சில தவறுகள் varietyக்காக. இந்த varietyயில் எந்த ஜீன் கூட்டு நல்ல இயந்திரத்தை உருவாக்கி அந்த இயந்திரம் தனக்குள் இருக்கும் டி என் ஏ செய்தியை அடுத்த தலைமுறைக்கு வெற்றிகரமாக செலுத்த பயன்படுகிறதோ அந்த ஜீன் கூட்டே பல்கிப் பெருகி உலகமெங்கும் ஆக்கிரமிக்கிறது. நாம், அதாவது வாழும் உயிரினம் ஒவ்வொன்றும், உயிர்வாழும் இயந்திரங்கள். எதற்கு ? நமக்குள் இருக்கும் ஒரு செய்தித்தளத்தை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அனுப்ப செலுத்தப்பட்ட, உயிர்வாழ்வதற்கு அந்த செய்தித்தளத்தாலேயே நிரல் கொடுக்கப்பட்ட (ப்ரோக்ராம் செய்யப்பட்ட) உயிர்வாழும் இயந்திரங்கள். ( We - and that means all living things - are survival machines programmed to propagate the digital database that did the programming.)


பின்னோக்கிப் பார்த்தால், இது வேறுமாதிரி இருக்க முடியாது என்று விளங்கும். ஒரு அனலாக் ஜெனடிக் அமைப்பை கற்பனை செய்து பார்க்கலாம். அது ஜெராக்ஸ் எடுத்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்த மாதிரித்தான் இருக்கும். ஒரு 800 தலைமுறைகளுக்குப் பின்னர் பேப்பர் வெறும் கருப்பாகத்தான் இருக்கும். தொலைபேசிகளுக்கு நடுவே வைக்கும் ஆம்ப்ளிபைர், பல பிரதி தலைமுறை தாண்டிய ஒலிநாடா, போன்றவை எல்லாம் இதே போல கொஞ்சம் தலைமுறைகள் தாண்டிய பின்னரே தவறுகள் பூதாகரமாகி செய்தி காணாமல் போய்விடுகிறது. ஆனால் ஜீன்கள் 10 கோடி தலைமுறை தாண்டிய பின்னரும் இந்தச் செய்தி காணாமல் போவதில்லை. டார்வினிஸம் வேலை செய்வதன் காரணம், இந்த (அவ்வப்போது நடக்கும் செய்தி மாறுதலால் உருவாகும் புதிய உயிரினங்களில், நடைமுறைக்கு ஒவ்வாதவையாக இருப்பவை அழிந்து போய், ஒத்துப்போகும் உயிரினங்கள் வாழ்வது ஒருபக்கம் இருந்தாலும்) பிரதி எடுக்கும் முறை மிகச்சுத்தமானது என்பதால்தான். ஒரு டிஜிட்டல் ஜெனடிக் அமைப்பு மட்டுமே டார்வினிஸத்தை யுக யுகங்களாக நடத்திக்கொண்டிருக்க முடியும். ஒரு டிஜிட்டல் ஜெனடிக் ஆறு மட்டுமே உயிரின் முன்-கேம்பிரியன் யுகத்திலிருந்து இன்றுவரை நம்மை கொண்டுவந்திருக்க முடியும்.

thanks to thinnai.com

மோடம் என்றால் என்ன ?

. இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் 'மோடம் ' (Modem) என்றொரு கருவி நமது கணினியில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்களே- அந்த மோடம் என்றால் என்ன ? அதன் பயன் யாது ? மோடம் இல்லாமல் நாம் இணையத்தைப் பயன்படுத்தமுடியாதா ?
இவற்றைப்பற்றி சிந்திப்பதற்கு முன்பு நாம் இணையம் பற்றிய சில பொதுவான விசயங்களை அலச வேண்டியுள்ளது. 'இணையம் '(Internet) உலகமுழுதும் இலட்சக்கணக்கான கணினிகளை இணைக்கும் ஒரு வலைப்பின்னல் என்பது நாம் அறிந்ததே. அதோடு அக்கணினிகள் தொலை பேசிக்கம்பிகள் (Telephone Cable) வழியாக இணைக்கப்பட்டுள்ளன என்பதும் நமக்குத்தெரியும். ஏன் இவை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன ? தனியாக ஒரு cable network ஐ ஏன் இணையத்திற்கென பயன்படுத்தவில்லை ?

இதற்கு முக்கியமான காரணம் ஏதும் இல்லை, ஏற்கனவே தொலைபேசித் தொடர்பு உலகம் முழுதும் வந்துவிட்டது அதன் மூலம் உலகத்தின் எந்த மூலைக்கும் நாம் தொடர்புகொள்ள முடியும். இதற்காக தொலைபேசிக்கம்பிகள் (Telephone cable) உலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டன. புதிதாக இணையத்திற்கொன கம்பிகள் அமைப்பது காலத்தையும், பணத்தையும் வீணடிப்பது ஆகும் எனவே இந்த, தொலைபேசிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தொலைபேசிக் கம்பிகளையே நாமும் இனையத்திற்காக பயனபடுத்தலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது, தொலைபேசிக்கம்பிகள் சாதாரண மிண்கடத்தி வகையைச்சார்ந்தவை அதாவது ஆங்கிலத்தில் 'Ordinary Electricity cables ' அதனால் என்ன ? என்று கேட்கிறீர்களா! இந்த வகைக்கம்பிகளைத் தொலைபேசிதவிர நாம் நமது வீட்டில் மின்விசிறிகளைப் பொருத்துவதற்கும், மின்விளக்குகளை இணைப்பதற்கும் பிற மின்சாரத்தை கடத்தும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இவைகளைக் கொண்டு இரண்டு கணினிகளை இணைத்தால் அந்த கம்பிகளின் மூலம் கணினியால் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாது.

இத்தகைய தொலைபேசிக்கம்பிகள் Analog Signal எனப்படும் அதிர்வலைகளை மட்டும் கடத்தும் திறன் கொண்டவை ஆனால் கணினிகள் தகவல்களை Digital Signal களாக உற்பத்தி செய்கின்றன. இத்தகைய கணினி உற்பத்தி செய்யும் Digital Signal களை கடத்தும் திறன் இக் கம்பிகளுக்கு இல்லை.

கணினிகளை நாம் Coaxial Cable எனப்படும் ஒருவகைக் கம்பிகளை கொண்டுதான் இணைக்க முடியும் இவைகளுக்குத்தான் கணினி உற்பத்தி செய்யும் தகவல்களை எடுத்துச்செல்லும் திறன் உண்டு. என்னடா இது Coaxial cable என்று குழம்ப வேண்டாம் நாம் நமது வீட்டில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்கு பயன்படுத்துகிறோமே ஒரு வகை உருண்டைக் கம்பிகள் அதாங்க Dish antenna வையும் receiver ஐயும் இணைப்பதற்கு அதே கம்பிகள்(Cable)தான். (அலுவலகத்தில் உள்ள கணினி வலைப்பின்னலில் பாருங்கள் இந்த மாதிரி உருண்டை கம்பிகளைத்தான்(cable) பயன்படுத்தியிருப்பார்கள்)

ஆனால் என்ன செய்வது! ஏற்கனவே இவ்வளவு தூரம் உலகமுழுதும் தொலைபேசிக்கம்பிகள் இருக்கின்றனவே, (இந்தியாவில் தனியாக கம்பிகளை நிறுவ வேண்டுமானால் இன்னும் ஐம்பது வருடம் சென்றுதான் இணையத்தை நாம் பயன்படுத்தமுடியும்) என்று சிந்தித்த விஞ்ஞானிகள், ஏன் இந்த கணினி உற்பத்தி செய்யும் Digital Signal ஐ Analog Signal ஆக மாற்றி தொலைபேசிகம்பி வழியாக அனுப்பி அடுத்த கணினியில் மீண்டும் அந்த Analog Signalஐ Digital Signal ஆக மாற்றி அதில் பயன்படுத்தக்கூடாது ? என்று முயன்றதால் வந்தது தான் இந்த 'மோடம் '.

Modem - MOdulator DEModulator என்பதின் சுருக்கமே.

இதில் இரண்டுவகைக்கருவிகள் உள்ளன ஒன்று அதாவது Modulator கணினி உற்பத்தி செய்யும் தகவலை தொலைபேசிக்கம்பிகளில் செலுத்தும்வண்ணம் மாற்றுகிறது (Digital to Analog) அடுத்ததாக Demodulator என்னும் கருவி தொலைபேசிக்கம்பிகள் வழியாக வரும் தகவல்களை கணினி புரிந்துகொள்ளும் நிலைக்கு மாற்றுகிறது (Analog to Digital)

இப்பொழுது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் தொலைபேசிக்கம்பிகள் மூலமாக இணையம் கணினிகளை இணைப்பதால் தான் நாம் இந்த 'மோடம் ' என்ற கருவியை நமது கணினியில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு தொலைபேசிக்கம்பியைப்பயன்படுத்தாமல் வேறு வகை அதாவது Coaxial வகை (cable)கம்பிகளைப் பயன்படுத்தினால் நமக்கு இணையத்தில் இணைவதற்கு மோடம் கருவி தேவையில்லை.

தற்காலத்தில், வளர்ந்துவிட்ட நாடுகளில் இணையத்திற்கென தனி Cable network (கம்பிப் பின்னல்)களை அமைத்திருக்கிறார்கள் இந்த வகை இணைய வலைப்பின்னல் அமைப்பில் தொலைபேசிக்கம்பிகளுக்குப் பதிலாக Optical Fibre என்னும் ஒருவித Cable களைப்பயன்படுத்துகிறார்கள் இவைகளில் மோடம் என்னும் கருவி பயன்படுத்தப்படுவதில்லை.

thanks to thinnai.com

எம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் - செய்திப் புதையலெடுப்பு (Data Mining)

எம்-ஐ-டி -டெக்லானலஜி ரிவியூவின் முக்கியமான 10 எதிர்காலத்துறைகள் - செய்திப் புதையலெடுப்பு (Data Mining)

உஸாமா ஃபாயாத்
'ஹலோ, திருவாளர் மணிகண்டன் அவர்களே. இந்தப் புத்தகத்தை வாங்கிய வாசகர்கள், இதேபோன்ற விஷயமுள்ள இந்த இந்த புத்தகங்களையும் வாங்கி இருக்கிறார்கள் ' அமேசான்.காம் போன்ற இணையப் புத்தகச்சாலைகளில் புத்தகம் வாங்கியிருந்தீர்களென்றால் இது போன்ற செய்திகளை உங்கள் வலைப்பக்கங்களில் பார்த்திருப்பீர்கள். உங்களது சொந்த விஷயங்களில் இவை தலையிடுகின்றனவா ? அல்லது உங்களுக்குத் தேவையான விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்கும் பக்கத்துத் தோழனா ? என்னவாக இருந்தாலும் இது ஒரு சாதனை. செய்தித்தளத்துக்கும் (database) தொழில்நுட்பத்துக்கும் ஒரு அட்டகாசமான விளக்கவுரை. பாரம்பரிய செய்தித்தளங்கள் பெரும்பாலும் சில கேள்வி கேட்டார்களென்றால் (அதுவும் அது புரிந்து கொள்ளும் முறையில் கேட்க வேண்டும்) சில பதில்களை சில கட்டங்கள் போட்டுச் சொல்லும். ஆனால் இது போன்ற சில சிபாரிசுகளுக்கு, கோடிக்கணக்கான பைட் செய்திகளையும், இன்னும் பலகோடிக்கணக்கான விற்பனைகளையும், யார் எப்போது வாங்கினார்கள் என்பதையும் ஆராய்ந்து ஒரு சில மில்லிவினாடிகளில் தரவேண்டும். இதற்கான தேடலின் அமைப்புகள் முன்பே இருப்பதில்லை. இதுதான் செய்திப் புதையலெடுப்பு data mining. இதை knowledge discovery in databases (KDD) செய்தித்தளங்களில் அறிவைத் கண்டெடுப்பது என்றும் கூறுகிறார்கள். இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம். இதுவே உங்களை மிகவும் தெரிந்தது போல பேசும் வலைப்பக்கங்களின் பின்னாலும் இன்னும் பல இடங்களிலும் வெளிப்பட்டு வரும் தொழில்நுட்பம். இதில் முக்கியமான வார்த்தை 'வளர்ந்து வரும் ' என்பது. இது பற்றி பேசும் உஸாமா ஃபாயாத் இது பற்றி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஏனெனில் இவர் இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முன்னர் இது கிடையாது. 1987இல், டுனீஷியா நாட்டைச் சேர்ந்த இந்த கணிணி அறிவியலாளர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க வந்தார். அவருக்கு கோடைக்கால விடுமுறை வேலையாக ஜெனரல் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில், கார் ரிப்பேர் சம்பந்தமான பெரிய செய்தித்தத்தளங்களைப் பழுது பார்க்கும் வேலை கிடைத்தது. அவர் எடுத்துக்கொண்ட வேலை, எந்த ஜெனரல் மோட்டார்ஸ் பழுதுபார்க்கும் டெக்னீஷியனும் இந்த செய்தித்தளங்களை, ஒரு கார் சம்பந்தமாக கேட்டால், அந்தக் கார் சம்பந்தமான எந்த பழுது அதிகம் வரும் எந்தப்பழுது குறைவாக வரும் அதற்கு என்ன செய்தார்கள் முன்பு .. இது போன்ற பதில்கள் வேண்டும். பிரச்னை நேரடியானது போலத்தான் இருக்கிறது. ஆனால், ஃபாயாத் சொல்வது போல, 'கோடிக்கணக்கான செய்திகள் அந்த செய்தித்தளங்களில் இருக்கின்றன. ஒரு தனிமனிதனால் அத்தனைக்குள்ளும் செல்ல முடியாது ' எனவே அவர் ஒரு pattern recognition algorithm என்ற மாதிரி கண்டுபிடிக்கும் அல்காரிதம் ஒன்று எழுதினார். அதுவே 1991இல் அவரது டாக்டரேட் தீஸிஸானது. அந்த தீஸிஸே இன்னும் இந்த செய்திப் புதையலெடுப்பு துறையில் மிகவும் பேசப்படும் கட்டுரை. செய்திப் புதையலெடுப்பு என்பது மிகவும் பரந்த துறை. ஃபாயாத் மிச்சிகனை விட்டு NASA என்ற அமெரிக்க விண்வெளித்துறையின் ஜெட் பரிசோதனை சாலையில் இணைந்தார். அங்கே அவர் விண்வெளி வானவியல் சம்பந்தமாக பலகோடிக்கணக்கான நட்சத்திரங்கள், அண்டங்கள், பேரண்டங்கள் பற்றிய செய்திகளில் patterns தேடும் வேலை செய்தார். இந்த ஆயிரக்கணக்கான விஷயங்களுக்கு நடுவில் ஒரு குறிப்பிட்ட pattern களைக் கண்டுபிடிப்பது பல துறைகளில் உதவும். உதாரணமாக வெள்ளி கிரகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஏராளமான ஒளிப்படங்களில் ஒரு குறிப்பிட்ட ஒளிப்படத்தில் எரிமலை இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது. முன்னமே ஒரு ஒளிப்படத்தில் எரிமலை இருக்கிறது என்பது தெரிகிறது. அந்தப்புகைப்படத்தின் மாதிரியை கணிணி தன் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அது போலவே இருக்கும் ஒளிப்படத்தை தேடுவது அதனால் இயலும். அந்த அல்காரிதம் கொடுத்தவர்தான் இவர். 'அது ரொம்ப சிறப்பாக வேலை செய்தது. உடனே அமெரிக்க ராணுவ உளவுத்துறை எங்களை தேடிவந்துவிட்டது. இந்த மாதிரி அவர்களுக்கும் வேலை செய்யும்படி இந்த அல்காரிதத்தை மாற்றித்தரக் கேட்டார்கள். அப்புறம் ரேடியாலஜி ஒளிப்படங்களில் தேடக்கூறி எங்களிடம் மருத்துவர்கள் வந்தார்கள் ' என்று ஃபாயாத் சொல்கிறார். 1995இல் ஃபாயாத் அவர்களும் அவரது தோழர்களும் உலகளாவிய மாநாடு நடத்தினார்கள். 500 பேர் வந்தார்கள். இவர்கள் எதிர்பார்த்ததற்கும் இருமடங்கு. 2000த்தில் நடந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் 950 பேர். இந்த நேரத்தில் உலகலாவிய வலை இண்டெர்நெட் என்று எல்லா மேஜைகளிலும் செய்திகளைக் கொண்டுவந்து தருகிறது. அது மட்டுமல்ல பெரிய நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்காக உருவாகும் செய்திகளும் அவைகளின் உள்ளே இருக்கும் முக்கியமான விஷயங்களும் செய்திப் புதையலெடுப்பை முக்கியமாக்குகின்றன. ஐபிஎம் போன்ற பெரும் நிறுவனங்கள் உடனே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தன. மைக்ரோஸாஃப்ட் ஃபாயாதை கூப்பிட்டு தங்களது நிறுவனத்தில் சேரச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். 'அவர்கள் என்னை பெரும் நிறுவனங்களின் செய்தித்தளங்களைப் பார்க்கும் படி கேட்டார்கள். இவர்கள் அந்த செய்தி மையங்களை 'செய்தி கிடங்குகள் ' ( 'data warehouses) என்று அழைக்கிறார்கள். உண்மையில் அவை செய்தி கல்லறைகள். அங்கு செல்லும் செய்திகள் பின்னால் ஒரு போதும் பார்க்கப்படுவதில்லை ' ஃபாயாத் 1996இல் மைக்ரோஸாஃப்டில் இணைந்தார். 'பெரும் செய்தித்தளங்களை எப்படி அணுகுவது என்றும் அவற்றிற்கான புதிய அல்காரிதங்களை கண்டுபிடிப்பதிலும் நாங்கள் தீவிரமானோம் ' என்கிறார் ஃபாயாத். 'பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல சிறிய நிறுவனங்களுக்கு இந்த செய்தி புதையலெடுப்பு பயனாகும் என்று கண்டோம் ' என்றார் ஃபாயாத். எனவே மார்ச் 2000த்தில் டிஜிமைன் digiMine என்ற நிறுவனம் ஃபாயாத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. செய்தி புதையலெடுத்தலின் எதிர் காலமென்ன ? மிகவும் பரந்தது என்கிறார் ஃபாயாத். இந்த கணிணி துறையில் ஆராய்ச்சியாளர்கள் திறமையாக வடிவமைக்கப்பட்ட செய்தித்தளங்களை தாண்டிச் செல்லும் போது, செய்திப் புதையலெடுத்தலின் முக்கியம் இன்னும் அதிகமாகும் என்றார். மிகவும் சூடான துறை என்று ஒன்றைச் சொல்கிறார். அதாவது வெறும் செய்திக் கோப்புகளில் (text files) இருக்கும் patternகளை கண்டுபிடிப்பது. ஆராய்ச்சி இன்னும் ஆரம்பத்திலேயே இருக்கிறது. பரிசோதனை விளைவுகளும் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கின்றன. பேச்சு மொழி எழுத்து மொழியில் இருக்கும் செய்திகள், பல்வேறு பத்திரிக்கைகள் உருவாக்கும் செய்திகள், அவர்களது எண்ணங்கள், அவர்களது கருத்துக்கள் இவற்றை யார் பார்க்கிறார்கள் ? இவை அனைத்தையும் ஒன்றாகக் கருதி ஒரு ஒட்டுமொத்த செய்தியை பார்க்க இயலுமா ? கலிபோர்னியா பல்கலைக்கழகம் செய்தி புதையலெடுக்கும் முறைமைகளைக் கொண்டு, பலகோடிக்கணக்கான ஜீன்கள் எந்த ஜீன் எதற்குப் பொருந்தும் போன்ற விஷயங்களை ஆராய முயற்சித்து வருகிறார்கள். இன்னும் ஒரு புதிய துறை என்று வீடியோ புதையலெடுத்தல் என்று கூறுகிறார். அதாவது எண்ணற்ற வீடியோக்கள் உலகெங்கும் ஏன் அமெரிக்காவிலேயே கோடிக்கணக்கில் தினந்தோறும் 24 மணிநேரமும் 500க்கும் மேற்பட்ட சானல்களில் காட்ட உருவாக்கப்பட்டு பின்னர் சேமிக்கப்படுகின்றன. கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தில் உள்ள கோப்புகளில் கணிணியால் தேடக்கூடிய வீடியோ பிட்டுகள், அதில் பேசும் பேச்சு போன்றவற்றை ஆராய ஒரு திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். செய்திப் புதையலெடுக்கும் இந்த அல்காரிதங்கள், செய்தித்தளத்தின் பகுதியாக எதிர்காலத்தில் கருதப்பட்டு செய்திப் புதையலெடுக்கும் முறைகள் செய்தித்தளங்களோடு இரண்டறக்கலந்துவிடும் என்று ஃபாயாத் கருதுகிறார். ** செய்திப்புதையலெடுப்பில் இருக்கும் மற்றவர்களும் நிறுவனங்களும் நபர்- நிறுவனம்- செய்யும் விஷயம் ஹோவர்ட் வாக்ட்லெர் (கார்னகி மெலான் பல்கலைக்கழகம்) பெரும் வீடியோ சேமிப்புகளில் தேடுதல் (Howard Wactlar (Carnegie Mellon) Search very large video collections மார்டி ஹெர்ஸ்ட் (கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி) செய்தித் தளத்திலில்லாத சாதாரண செய்திகளிலிருந்து விஷயங்களை பெறுதல் Marti Hearst (University of California, Berkeley) Automated discovery of new information from large text collections நோகியா ஆராய்ச்சி மையம் (ஹெல்ஸின்கி, பின்லாந்து ) தொடர்ந்து வரும் செய்திகளிலிருந்து திரும்பத்திரும்ப வரும் விஷயங்களை பிரித்தெடுத்தல் Nokia Research Center (Helsinki, Finland) Finding recurrent episodes in event sequence data ரகு ராமகிருஷ்ணன் (விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம்) கணிணி வலையில் செய்திகளை தேடுதல் Raghu Ramakrishnan (University of Wisconsin) Visual exploration of data on the Web

thanks to thinnai.com
ReplyReply All Move...Go to Previous message | Go to Next message | Back to Messages

ஞாயிறு, மார்ச் 01, 2009

பூவாள்

பூவாள்
கனி மொழியாள்
காந்த விழியாள்
பூ முகத்தாள்
புன் சிரிப்பாள்
தங்க நிறத்தாள்
தாமரையாள்
மென் குரளாள்
சொல்லால் சுவையாள்
தேன் தமிழால்
எனைக் கவர்ந்தாள்

கொடி இடையாள்
பூ வடியாள்
பூங் குழலாள்
பூ முடித்தாள்
புன்னகைத்தாள்
நிலம ; பார்த்தாள்
நிலவாய் நின்றாள்

வரவோ என்றாள்
வண்ண மயமானாள்
எண்ண மயமானாள்
என்னில் ஒன்றானாள்
சொல்லொண்ண சுவையானாள்

கையால்
மெய்யால்
தீணடல்
வேண்டாள்
நாணத்தால்.
இனியாள்
அவள்
என் இல்லாள்