திங்கள், செப்டம்பர் 05, 2011

மரணம்



மரணம் என்பது
உல்லாச வாழ்விற்கான
நுழைவுச் சீட்டு

எல்லையற்றப் பெருவெளியில்
ஏகாந்தமாய்
எந்தத் தேவையுமின்றி
வாழப் போகும்
வாழ்கையின்
துவக்கம்


பசியிலிருந்து
பந்தத்திலிருந்து
பாசத்திலிருந்து
பயத்திலிருந்து
விடுபடப் போகும்
விசேச நாள்

சுமையாய் சுமந்த
நினைவுகளை
இறக்கி வைக்கப் போகும்
இனிய நாள்

நான் என்ற பொய்
முகவரியை விட்டு
உண்மை அறியப் போகும்
உன்னத நாள்





புதன், மார்ச் 23, 2011

மறந்து நின்றான்






மனிதன்.
விண்ணில் சென்று
மண்ணில் மீளும்
விண்கலம் படைத்து
மகிழ்ந்து நின்றான்

வானில் ஏறி
வட்ட பூமியை
சுற்றி வந்தே
திட்டமிட்டான்

விண்ணை முட்டும்
கட்டிடம் கட்டி
கர்வ முற்றான்

இரவும் பகலாய்
ஓளிர்ந்து நிற்க
மின்னொளிப் படைத்து
கண்டு மகிழ்ந்தான்

விரலசைவில்
விரைந்து செல்ல
வாகனம் படைத்து
ஓடி மகிழ்ந்தான்

கண்ணசைவில்
இயங்கும் பல
கணினி படைத்து
களிபுற்றான்


எல்லாம் படைத்த
மனிதன் இன்று
படைத்த ஒருவனை
மறந்து நின்றான்

படைத்தவனோ
சில வினாடிகள்
அசைந்து
தன் இருப்பு தன்னை
அறிவித்தான்

கடலின் ஆழத்தில்
உளை வைத்தான்
கற்பனைக் கெட்டா
சேதங்களை
விளைவித்தான்

எல்லாம் மறந்து
மனிதனை
அழ வைத்தான்

பலம் அனைத்தும்
எனக்கே என்று
மீண்டும் மீண்டும்
நிரூபித்தான்.

ஞாயிறு, நவம்பர் 07, 2010

விஞ்ஞானமும் மெய்ஞானமும்


விஞ்ஞானம் என்பது காலம் காலமாக இந்த பூமியில் உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வது, விஞ்ஞானிகள் எதையும் உண்டாக்கவில்லை உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வதற்கே, நம் அறிவை எண்ணி நம்மை நாமே மெச்சிக் கொள்கிறோம், இவற்றையெல்லாம் உண்டாக்கி வைத்திருப்பவனின் பெருமையை, அறிவை சொல்வதே மெய்ஞானம்.

விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் முன் மைக்ராஸ்கோப்பில் பார்க்கவேண்டிய பொருள், விஞ்ஞானத்தை கொண்டாடும் நாம் அதன் மூலம் கண்டுபிடித்தவற்றைப் படைத்தவனின் அறிவு பற்றி சிந்திப்பதில்லை அதைச் சொல்வது தான் மெய்ஞானம்.

இந்த பிரபஞ்சமே அந்த பிரம்மத்தின் அறிவு தான், உதாரணமாக நாம் இதைத் சொல்லலாம் ஒரு ஓவியன் வரைந்த ஓவியம் அது வரையப் படும் முன் எங்கிருந்தது? ஒரு கற்பனையாக அவன் அறிவில் இருந்தது, அதே போல் தான் இந்த பிரபஞ்சமும் அந்த பிரம்மனின் அறிவு.

தாமஸ் ஆல்வா கண்டுபிடித்த மின்சாரம் ஆண்டாண்டு காலமாய் இங்கு தான் இருந்தது, ஆல்பர் ஐன்ஸ்டின் சொன்ன, சக்தியில் இருந்து பொருளும் பொருளில் இருந்த சக்தியும் ஆண்டாண்டு காலமாய் இந்த பிரபஞ்சத்தின் இயல்பாய் நடந்து கொண்டிருந்து, டாலமி சொன்ன, வட்டப் பாதையில் கோள்கள் சுற்றி வருகின்றன என்பதும் நடந்து கொண்டுதானிருந்து, ஐசக் நியுட்டனின் புவி ஈர்ப்பு விசை கொள்கை அதில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருந்து, ஆனால் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றை எல்லாம் கண்டுபிடிக்க நமக்கு நூற்றண்டுகளை கடக்க வேண்டியிருந்து.

இன்றய எலக்ட்ரானிக்ஸ் யுகம் சொல்கிற எங்கோ நடப்பதை இங்கே பார்க்க முடியும் என்பதையும், உலகின் ஒரு மூலையில் பேசுவதை மறு மூலையில் கேட்க முடியும் என்பதையும் நம்ப நமக்கு இத்தனை நூற்றண்டுகளாயிற்று, இன்றய கண்டுபிடிப்புகளும் இனி வரும் கண்டுபிடிப்புகளும், இடமும் காலமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டாகிவிட்டது அதை உணர நம் அறிவு வளர இத்தனை காலங்களாயிற்று.

இவற்றையெல்லாம் படைத்து அதை உணர நமக்கு வேண்டிய அறிவையும் கொடுத்த அந்த பரம் பொருளை அது கொடுத்த சொற்ப அறிவை கொண்டு அறிய முற்படுவது விஞ்ஞானம். மெய்யறிந்து, மெய்யழிந்து, மெய்யில் மெய்யாகி உதிர்த்த மெய்யான வார்த்தைகளே மெய்ஞானம்;;.

விஞ்ஞானம் இன்று உபகரணங்களுடன் செய்து காட்டியதை, அன்றே உபகரணங்களின்றி செய்துகாட்டியது மெய்ஞானம், சிற்றறிவை அழித்து பேரரறிவில் ஐக்கியமாகி அறியப்பட்ட உண்மைகள் அவை.

இன்று சிற்றறிவைக் கொண்டு பேரரறிவை அளக்க முற்படுவது விஞ்ஞானம், இன்றும் விஞ்ஞானத்தால் விளங்க முடியா, விளக்க முடியா நிகழ்வுகள் பல உண்டு. விஞ்ஞானத்தை மெய்ஞானத்திற்கு எதிராக பயன்படுத்தாமல் மெய்ஞானத்துடன் விஞ்ஞானத்தையம் கலந்து அறிய முற்ப்பட்டால் வரும் காலங்களில் பல அறிய நிகழ்வுகள் நிகழலாம். அதுவரை மனிதன் தன் சொற்ப அறிவால் தன்னைத்தானே சூறையாடமல் இருக்க வேண்டும்.

இந்த நூற்றண்டின் மிக சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட ஐன்ஸ்டின் கூட, நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக்குள் தோன்றியது என்று கூறியிருக்கிறார். அந்த தோன்றலைக் கூறுவது தான் மெய்ஞானம்.




திங்கள், அக்டோபர் 18, 2010

பிறவிப் பயன்




மனிதப் படைப்பு

உலகில் கோடானு கோடி ஜிவராசிகள் பிறக்கின்றன மரிக்கின்றன, அவைகள் தோன்றுவதும் மரிப்பதும் தானே அறியா ஒரு இயல்பு சுழற்சியாக இந்த உயிரின தோற்ற மறைவு பிரபஞ்சத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்ற ஒரு அற்புதப் படைப்பு எல்லா உயிரினங்களிலிருந்தும் வேறுபடுகிறது.

காடு, மலை, கிரகம் முதல் விண்ணில் மண்ணில் உள்ள அனைத்து உயிரிகளும் தோன்றுவதற்கு முன் எதுவாக இருந்ததோ அதுவாகவே தோன்றிய பின்னும் இருக்கிறது. அதன் உருவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம் ஆனால் அவற்றில் தனக்கென்று ‘சுயம்’ எதுவும் இருப்பதில்லை, உருவங்கள் வேறு வேறாக இருந்தாலும் அதன் உள்ளமை ஒன்றாகத்தான் இருக்கிறது மனிதன் உட்பட, ஆனால் மனிதனுக்கு தோற்றுவிக்கப் பட்ட ‘தான்’ என்ற மாய உணர்வு தன்னை தனியானவனாக உணரவைக்கிறது.

உண்மை நிலை

தன்னை மூலத்திலிருந்த பிரித்து உணர்வதே ‘தான்’ என்பது இதனையே அகங்காரம் என்கிறோம். இந்தப பிரபஞ்சத்தில் மனிதனையும், ஜின்னையும் தவிர வேறு எந்த படைப்பும் தன்னை பிரித்து உணர்வதில்லை. அதனால் மற்ற உயிரினங்கள் இறப்பைப் பற்றிய பயம், கவலைக் கொள்வதில்லை, எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பி செல்கிறது. அவைகள் எங்கிருந்து வந்தோம் என்பதையும் அறிவதில்லை எங்கே போகிறோம் என்பதையும் அறிவதில்லை. ஆனால் ‘தான்’ என்ற உணர்வில் வாழும் மனிதனுக்கு மட்டும் தான் மரண பயம், இறைவன் தன் வேதமான திருமறையில் கூறுகிறான் ‘என்னிலிருந்தே வெளியானிர்கள் என்னிடமே மீளுவிர்கள்’ இதை மனித மனம் ஏற்றுக் கொள்வதில்லை நாம் இங்கேயே இப்படியே இருந்து விட வேண்டும் என்று விரும்புகிறோம், இங்கே தான் நாம் இருப்போம், ஆனால் இந்த உருவத்திலேயே நிலைத்திருக்க விரும்புகிறோம்.

நாம் இந்த உருவத்தைக் கொண்டாடுகிறோம் வேறு யாருடையதும் அல்ல நம் உருவத்தையே நாம் கொண்டாடுகிறோம் இதுவே இத்தன கஷ்டத்திற்கும் காரணம். மரணம் என்பது இல்லாமல் போவது அல்ல, அது ஒரு நிலை மாற்றமே, பஞ்ச பூதங்களின் கூட்டாக இருந்த நாம் மீண்டும் பஞ்ச பூதங்களாகிவிடுவோம், இந்த பிரபஞ்சத்தில் எதுவும் கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை, எதுவும் நிரந்தரமும் அல்ல, மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

நோக்கம்

இதையெல்லாம் ஆய்ந்து உணரும் சக்தி மனிதனுக்கு மட்டும் படைக்கப் பட்டிருக்கிறது, இதற்காகவே தன்னைப் பிரித்துணரும் அந்த அகங்காரமும் படைக்கப் பட்டது. ஆனால் இயல்பு நிலை என்னவென்றால், பிறக்கிறோம்,வளர்கிறோம், பொருளீட்டுகிறோம், சந்ததி உண்டாக்குகிறோம், எத்தனை கஷ்டம் இந்த உலகில் பட்டாலும் சந்தோசமாக வாழ்வதாக நம்மை நாம் நம்பிக்கொள்கிறோம், வாழ்ந்தது போதும் என்று வாழ்வின் எந்தக் கட்டத்திலும் எண்ணுவதில்லை.
சரி மற்ற ஜீவராசிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவை அலங்காரத்திற்கு படைக்கப் பட்டவை, ஆனால் மனிதனின் தோற்றத்தின் அர்த்தம்? ஏன் பிறந்தோம்? நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை சிந்திக்கத் தான் மனிதனுக்கு ஆறாம் அறிவு. ஆனால் இந்த ஆறாம் அறிவை கடவுள் சண்டையில் தொலைத்துவிட்டு மொழியும் மிருகங்களாகிவிட்டோம், தன்னை அறிந்தவனே தன் கடவுளையும் அறிந்தான் அதுவே பிறவி எடுத்ததன் நோக்கம்.

செவ்வாய், அக்டோபர் 05, 2010

வழுக்கல்கள்


வெளிச்சத்திலும்
இருண்டு கிடக்கும்
மனங்கள்
விளக்கை காணமலே
மாண்டு விடும்
விட்டில்கள்

இறக்கவே மாட்டோம்
என்பது போல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பது போல்
இறக்கும் மனிதர்கள்

ஆசை எனும்
ஈரமான தலையில்
தேவை என்ற
பாரமான சுமைகளுடன்
சுகமாய் வாழ்வதாய்
நமக்குள் ஒரு
சொப்பனம்

விடிந்த பிறகும்
திறக்க மறுக்கும்
இமைகள்
அறிந்த பிறகும்
உணர மறுக்கும்
மனங்கள்.

இப்படி
வாழ்கை எனும்
பாதையில்
வழிநெடுக
வழுக்கல்கள்.

ஞாயிறு, அக்டோபர் 03, 2010

அமெரிக்காவின் (U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சரியும் செல்வாக்கும்


அமெரிக்காவின்(U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சரியும் செல்வாக்கும்

யு.எஸ்.எ பொருளாதார வீழிச்சியை மட்டும் சந்திக்கவில்லை அதன் அரசியல்,தொழில் புள்ளியல் படி அது கடந்த பத்தாண்டுகளாக தன் ஆதிக்கத்தை இழந்து வருகிறது என்பது கண்கூடான உண்மை.

பிரேசில் அமெரிக்க கண்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடு, தற்போதைய கணிப்பின் படி நான்கு நாடுகள் (BRIC – Bracis,Russia,India,China) இவற்றின் கூட்டனியில் பிரேசில் முன்னனியில் இருக்கிறது. 2032 ல் அதன் பொருளாதாரம் நம்பர் ஒன்னாக இருக்கும்.

MARVINS (Mexico,Australia,vietnam,Indonesia,Nigeria and South Africa) எனறழைக்கப் படும் ஐந்த நாடுகள் கூட்டனியில் மெக்ஸிக்கோ அரசியல் சக்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னனியில் இருக்கிறது. கனடாவும் வெனிசூலாவும் எணணெய் வளத்தில் ஒரு நீண்ட எதிர்காலத்தைக் கொண்டிருக்கின்றன.

பெருவும், ச்சிலியும் தாதுவளத்தில் தன்னை முன்னிருத்திக் கொள்கின்றன, இந்த நாடுகள் யாவும் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் போது தன்னை மேம்படுத்திக் கொள்கின்றன. இந்த அறிகுறிகள் யாவும் அமெரிக்கா தன் பொருளாதாரத்திலும் செல்வாக்கிலும் பின் தங்கிக் கொண்டுவருகின்றன என்பதைக் காட்டுகிறது.

ஈரான் விசயத்தில் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்து விட்டது பிரேசில், ஹிலாரி கிளிண்டன் நேரிடையாக சென்று கூறியும், அமெரிக்காவிற்கு சாதகமாக ஈரானுக்கு எதிராக தடைவிதிக்க கூடாது என்று கூறிவிட்டது, ஹிலாரி வெறுங்கையுடன் தான் திரும்பினார். பிரேசில் ஈரானுடனும் அமெரிக்காயுடனும் நட்புறவாக இருக்க விரும்புவாதாக கூறிவிட்டது.

இன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரர் மெக்ஸிக்கோ நாட்டுக்காரர், அமெரிக்கன் அல்ல, கடந்த பதினாறு வருடங்களில் முதன் முறையாக ஒரு அமெரிக்கர் உலகப் பணக்காரர் இல்லை, மெக்ஸிக்கோ நாட்டுக் காரரான கார்லோஸ் ஸ்லிம் என்பவருக்கு போய்விட்டது. அவரின் சொத்து மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மூன்று வருடப் பொருளாதார வீழ்ச்சிக்கு பின் லத்தின் அமெரிக்க வேகமாக அதிலிருந்து மீண்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னேற்றம் ஆமை வேகந்தான், பல ஆயிரம் பேர் வேலையிழப்பும், பல தொழிற்ச்சாலைகள் மூடவேண்டிய கட்டாயமும் அமெரிக்கவில் ஏற்ப்பட்டுள்ளது.

1930களில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்ட பொழுது மிகவும் பாதிக்கப் பட்டது ச்சிலி, பெரு, பொலிவியா ஆனால் தற்போது நிலைமையே வேறு, புள்ளியியல் படி மெக்ஸிக்கோ, பிரேசில், அர்ஜென்டைனா ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் பலகீனமாகவே இருக்கிறது இதே நிலை நீடிக்குமானால் லத்தீன் அமெரிக்காவின் ஏற்றுமதி வேறு நாடுகளுக்கு மாறும்.

ச்சிலி அமெரிக்காவை விட 300 சதம் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்கிறது, முன்பு தாமிர உற்பத்தியில் நம்பர் ஒன்னாக இருந்தது அமெரிக்கா, இன்று அமெரிக்காவின் தாமிர உற்பத்தி 1.2 மில்லியன் மெட்ரிக் டன், ச்சிலியின் தாமிர உற்பத்தி 5.4 மில்லியன் மெட்ரிக் டன்.

பிரேசில் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாக இரும்பு தாது உற்பத்தி செய்கிறது 1892 ல் அமெரிக்காவில் மிகப் பெரிய இரும்ப சுரங்கம் கண்டு பிடிக்கப் பட்டு இரும்பு உற்பத்தியில் முன்னனியில் இருந்தது, தற்போது அமெரிக்காவின் இரும்பு தாது கையிருப்பு 2100 மெட்ரிக் டன், இதை விட 7 நாடுகளில் இரும்பு தாது கையிருப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலின் இரும்புத்தாது கையிருப்பு 8900 மெட்ரிக் டன், அமெரிக்கா உற்பத்தி செய்யும் இரும்புத்தாது வருடத்திற்கு 54 மெட்ரிக் டன், பிரேசிலின் உற்பத்தியோ 250 மெட்ரிக் டன்.

அடுத்து கனடாவும், வெனிசூலாவும் வரும் பத்தாண்டுகளில் எண்ணெய் உற்பத்தியில் முன்னனி வகிக்கப் போகின்றன, தற்போது அமெரிக்கா உற்பத்தி செய்யும் எண்ணெய் ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்கள், தற்போது அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு 21 பில்லியன் பீப்பாய்கள். வரும் பத்தாண்டுகளில் அண்டை நாடுகளின் எண்ணெய் உற்பத்தி 99 பில்லியன் முதல் 178 பில்லியன் பீப்பாய்கள் இருக்கும், எதிர்காலத்தில் அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும்.

பிரேசிலின் தற்போதைய மாட்டு இறைச்சியின் உற்பத்தி அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ளது, அமெரிக்காவின் மாட்டிறைச்சி உற்பத்தி 800000 மெட்ரிக் டன், பிரேசிலின் உற்பத்தி அளவு 2,200,000 மெட்ரிக் டன் ஆகும். பிரேசிலில், அமெரிக்க கனடா கூட்டுறவுடன் உலகிலேயே மிகப் பெரிய மாட்டிறைச்சி உற்பத்தி தொழிற்ச்சாலை குளிர் பதன வசதியுடன் தொடங்கப் பட்டுள்ளது.

நான்கு சக்தி மிக்க நாடுகளின் (பிரேசில், ரஸ்யா, இந்தியா,சீனா) பணத்தை பொதுவான பணமாக்கி புழக்கத்தில் கொள்ளலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது அது வெற்றிகரமாக செயல் பாட்டில் வரும் போது அமெரிக்க டாலர் மதிப்பு வெகுவாக உலக சந்தையில் குறைந்துவிடும். ஏற்கனவே யுரோவின் வருகையால் பல நாடுகள் தன் வர்த்தகத்தை யுரோவிற்கு மாற்றிக் கொண்டுவிட்டன. டாலர் தொடர்ச்சியான வீழ்ச்சியை கண்டுவருகிறது.

இங்கு முக்கியமாக குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் உலகின் முக்கிய சக்திகள் தங்களுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறது, உதாரணத்திற்கு சீனா, பிரேசிலுடன் மிகப் பெரிய ஒப்பந்தங்களில் கையெலுத்திட்டுள்ளது. மிகப் பெரிய தொழிற் சாலை, அதிவேக ரயில் ஆகியவை ஒப்பந்தத்தில் உள்ளவை.

ஒரு சர்வேயில் தெரியவந்திருப்பது, பிரேசில் சுற்றுச் சூழல் தூய்மைக்காக 0.37 சதம் முதலிடு செய்துள்ளது, கனடா 0.25 சதம் முதலீடு செய்துள்ளது, மெக்ஸிக்கோ 0.14 சதம் முதலிடு செய்துள்ளது அமெரிக்கா உலகில் 11வது இடத்தல் உள்ளது இதன் முதலீடு 0.13 சதம் ஆகும்.

இறுதியாக சி.ஐ.ஏ வின் செய்திக் குறிப்புபடி அமெரிக்க எதிர்பாளர்களான, ஜாக்கப் கால்மேன், பிடல் காஸ்ட்ரோ, மானுவல் நோர்கியா, சே குவாரா போன்ற பலரை அமெரிக்காவால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை, ஹியுகோ சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பை தடுக்க முடியவில்லை, 24 மணிநேரத்தில் பிடித்துவிடுவோம் என்று சொன்ன பின்லேடனை இதுவரை பிடிக்க முடியவில்லை.

பல உலக நாடுகளின் கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த, சீர் குலைத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும், செல்வாக்கு சரிவும் கண்டு வருவது மட்டுமல்ல, உலக நாடுகளின் மத்தியில் ஒரு கேவலமான பார்வைக்கு ஆளாகியிருக்கிறது. தன் தரம்கெட்ட ஆட்சியாளர்களால் தான்தோன்றி தனமான ஆட்சியால் உலகின் மரியதையை இழந்து வருகிறது அமெரிக்கா, இதற்கு அமெரிக்க மக்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

thanks for yahoo finance

புதன், செப்டம்பர் 29, 2010

விண்ணுலகப் பயணம்


விண்ணுலகப் பயணம்
அகில உலகின் அருட்கொடை எம் பெருமான் முகம்மது(ஸல்) அவர்கள் தமக்கு நபித்துவம் கிடைத்தபின் மார்க்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள், ஏக இறைக் கொள்கையை அன்றய மக்கத்துக் காஃபிர் ஏற்க மறுத்துக் கொண்டிருந்தார்கள். பல இன்னல்களுக்கிடையே தளராமல் ஏகத்துவக் கொள்கையை ரஸீல் (ஸல்) அவர்கள் பரப்பி வந்தார்கள். அப்பொழுது தான் இறைவனிடமிருந்து விண்ணுலக அழைப்பு வந்தது. இறைவன் திருமறையில் பனி இஸ்ராயில் அத்தியாயத்தில் 17:1 ஆயத்தில் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தைப் பற்றிக் கூறுகிறான்.
‘(அல்லாஹ்)மிகப் பரிசுத்தமானவன், (முகம்மது(ஸல்)) தன் அடியாரை (சிறப்புற்ற பள்ளியிலிருந்து(கஃபா) மஸ்ஜில் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்(அவ்வாறு அழைத்துக் சென்று) நாம் அதனை சூழ உள்ள பூமிகளை ஆசிர்வதித்துள்ளோம், நம்முடைய திருஷ்டாந்தாங்களைகளை அவருக்கு காண்பிப்பதற்க்காகவே (அழைத்துக் சென்றோம்) நிச்சயமாக (உமதிறைவனாகிய) அவனே செவியுறுவோனும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்.
சர்வ வல்லமைப் படைத்த ரஹ்மான் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக பயணம் பற்றிய நிகழ்வை இந்த ஆயத்தில் கூறுகிறான், நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து 40 இரவுகள் ஒட்டகையை ஓட்டினால் கடக்கும் தூரத்திற்கு அழைத்துக் சென்று, அங்கிருந்து விண்பயணத்திற்கு அழைத்துக் சென்றிருக்கிறான், ரஸீல் (ஸல்) வாழ்ந்துக் கொண்டிருப்பது மக்கா, மார்கப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருப்பது மக்கா, அல்லாஹ் நினைத்திருந்தால் கஃபத்துல்லாவிலிருந்தோ, நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலிருந்தே விண்ணுலப் பயணம் அழைத்துக் சென்றிருக்க முடியும் அப்படியிருந்தும் ஏன் அவர்களை மக்காவிலிருந்து அவ்வளவு தூரம் அழைத்துச் சென்று விண்ணுலப் பயணம் நடந்து?
இதை நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் ஒரு விசயத்தை உலக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டி, என்ற உண்மை தெரிய வரும் நபி (ஸல்) அவர்களை ஜிப்ரயில் மூலம் ஏழு வானங்களையும் தாண்டி அழைத்துக் செல்கிறார்கள் இறைவனை சந்திப்பதற்கு, ஒவ்வொரு வானத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக ஹதிஸில் விளக்குகிறார்கள், அந்த நிகழ்வுகளையும் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தையும் ஏற்க மறுக்கின்றனர்.
இது இயல்பு வானத்தில் நான் அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொன்னால் வானத்தை இதற்கு முன் யார் பார்த்திருகிறார்கள், அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபி(ஸல்) அவர்களைத் தவிர யாரும் பார்த்தில்லை. அப்படியிருக்க அங்கு கண்டதை எப்படி நம்புவார்கள், இதை அறிந்து தான் அல்லாஹ் நபியவர்களை மக்காவிலிருந்து தொலை தூரம் இருக்கும் மஸ்ஜில் அக்ஸாவிலிருந்து அழைத்துக் சென்றான்.
அன்றய மக்கத்துக் காஃபிர்கள் வியாபார நிமித்தம் ஜெருசேலம் சென்றிருக்கின்றனர், நபியவர்கள் சில வினாடிகளில் அங்கு செல்வது சாத்திமே இல்லை,நபியவர்கள் தன் வாழ்நாளில் அங்கு சென்றவர்களுமல்ல. இது உண்மையா என்று அறிந்தக் கொள்ள அவர்கள் நபியவர்களிடம் அங்குள்ள சில அடையாளங்களைக் கேட்டனர் நபியவர்களும் சரியாகச் சொன்னார்கள், சில வினாடிகளில் இவர் இவ்வளவு தூரத்தை கடந்திருப்பாரானால் விண்ணுலகப் பயணும் சாத்தியமே என்பதை நிருபிக்க பிற்காலத்தில் ஒரு சாட்சி வேண்மென்தினால் தான் இறைவன் நபியவர்களை மஸ்ஜிதில் அக்ஸாவிலிருந்து விண்ணுலகப் பயணம் அழைத்துச் சென்றான்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாக இருக்கிறான், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.