சனி, அக்டோபர் 25, 2008

பூ


தேவையில்லை

பூ வாசம் நுகர எனக்கு
பூ கையில் தேவையில்லை
தென்றலை நான் அனுபவிக்க
ஒரு சோலை இங்கு தேவையில்லை
குயிலின் குரல் கேட்பதற்கு
குயில் அருகில் தேவையில்லை
மனம் எனும் யாழினிலே
நினைவெனும் தந்தி மீட்ட
விரலொன்றும் தேவையில்லை
அது போல
நான் உன்னை காதலிக்க
நீ இங்கு தேவையில்லை.


என்னவள்

என்னவளைப் பற்றி
என்னிடம்
ஒரு வரியில்
கேட்டார்கள்
நான் சொன்னேன்
அவள் ஒரு
அழகான இம்சை

வெள்ளி, அக்டோபர் 24, 2008

எனக்கு நீ


எனக்கு நீ

சாதரண உடை
சாந்த முகம்
களைந்த கூந்தல்
கள்ளமில்லா சிரிப்பு
ஆனாலும்
உலக அழகி
எனக்கு நீ

எதிர்படும் வாழ்கையில்
எத்தனைப் பெண்கள்
கலக்கும் உடை
கவிழ்கும் பார்வை
ஆனாலும்
உலக அழகி
எனக்கு நீ

இறுக்கமாக உடையணிந்து
பெண்கள் நெருக்கமாக
போகும் போதும்
சுருக்கமாகச் சொன்னால்
நெஞ்சுக்குள் சுகந்தமாய்
எனக்கு நீ

என் இதயம்
கவலை எனும்
கரு மேகத்தால்
சூழப்படும் போதும்
வெளிச்சந் தரும்
மின்னலாய்
எனக்கு நீ

நான் தனிமை எனும்
நந்தவனத்தில்
கவிதை பூக்கள்
பறிக்கும் போதும்
தென்றலாய்
எனக்கு நீ

ஆம்
எனக்கு மட்டும்
நீ

சிந்திக்க


சிந்திக்க
தான் அதிகம்
அறிந்திக்க வில்லை
என்பதை
அறிந்திருப்பவனே
அறிவாளி
என்னில் வெளிப்பட்டது
என்பது வெறும்
எண்ண மயக்கம்
என்னில்
உன்னில்
விண்ணில்
மண்ணில்
வியாபித்திருப்பது எல்லாம்
அந்த ஒன்றின் சாறு
அதுவன்றி இல்லை வேறு
ஆக என்னில் என்ற
எண்ணம் விட்டு
ஒன்னில் என்ற
உண்மை அறிவதே
அறிவு

பொங்கட்டும் அமைதி


மனிதன் இறைவனின் படைப்பில் ஓர் அற்புத படைப்பு, உலகில் படைக்கப்பட்ட அத்தனை ஜிவராசிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அதி அற்புத சக்தியாகிய அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே மனிதன் சகல படைப்புகளிலிருந்தும் வேறுபடுகிறான், உயர்ந்தும் நிற்கிறான். எல்லா படைப்புகளும் அதனதன் வாழும் சூழ்நிலை, தட்பவெப்ப நிலை, கால நிலைக்கு ஏற்ப படைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டும் எல்லா சூழ்நிலைகளையும் தனக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளும் அறிவு கொடுக்கப் பட்டிருக்கிறது.

இது போன்ற எத்தனையோ சிறப்புகளைப் பெற்ற மனிதன் இறைவன் கொடுத்த அறிவால் தன்னை எவ்வளவோ உயர்த்திக் கொண்டான், இன்று உலகம் நம் உள்ளங்கையில், அவ்வளவு வேகமான தகவல் தொடர்பு, மனிதன் உலகின் ஒரு மூலையில் நடப்பதை மறு மூலையில் அதே வினாடி பார்கிறான் அத்தனை விஞ்ஞான வளர்ச்சி, ஒரு மணி நேர தூரம் இப்போது ஒரு நிமிடமாகி விட்டது, ஒரு நாள் தூரம் இப்போது ஒரு மணிக்கும் குறைவான தூரமாகிவிட்டது.

மண்ணை அளந்த மனிதன் இன்று விண்ணையும் அளக்கிறான், நிலவுக்கு போனதெல்லாம் பழைய கதை இப்போது பக்கத்து சூரியகுடும்பத்தில் என்ன நடக்கிறது என்று அறியும் வசதி வந்து விட்டது. இன்று மனிதனுக்கு எல்லாம் இருக்கிறது இருந்தும் மனிதம் தொலைந்து விட்டது, தன் அறிவால் தன்னை எத்தனை உயர்த்திக் கொண்டானோ, அத்தனை, அழிவுக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டான், அத்தனை அறிவும் மனித வளர்ச்சிக்கு பயன்படாமல் மனித அழிவுக்கும் பயன் படுகிறது. முன்பு ஒரு மனிதன் ஒரு மனிதனை வாளால் வெட்டிக் கொன்றான், இப்போது ஒரு குண்டு ஒரு நாட்டையே அழிக்க போதுமானது, ஜப்பானின் நாகசாகி, உறிரோசிமாவை உலகம் மறந்து விடவில்லை.

ஓவ்வொரு நாடும் தன் நாட்டு வளர்ச்சிப் பணியைவிட, மக்களின் தன் நிறைவைவிட, ராணுவத்திற்கே அதிகம் செலவிடுகிறது, இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல, ஏன்? ஏன்? என்ற மீண்டும் மீண்டும் எழுகிறது, என்ன இல்லை இந்த மனிதனுக்கு, இல்லை என்னதான் தேவை இந்த மனிதனுக்கு என்று மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது, எல்லாம் கிடைத்த மனித்னுக்கு ‘தான் என்ற அகந்தை மேலோங்கும் போது அடக்கி ஆள நினைக்கிறான், இவன் எனக்கு கீழ், இந்த நாடு எனக்கு கீழ், இந்த உலகமே எனக்கு கீழ் என்ற ஆதிக்க வெறி மேலோங்குகிறது. ஆதிக்க வெறிபிடித்த ஆயுத பலம் கொண்ட நாடுகள் இன்று ஆடும் வெறியாட்டத்தை உலகம் பார்த்துக் கொண்டு தானிருக்கிறது.

இன்று மட்டுமல்ல மனித நாகரிகம் வளர தொடங்கிய காலத்திலிருந்தே கூடவே வளர்ந்து வந்திருக்கிறத இந்த ஆதிக்க வெறியும், இது போல் வெறியாட்டம் ஆடிய எத்தனையோ வல்லரசுகளின் வாழ்வையும் வீழ்வையும் பார்த்திருக்கிறது இந்த உலகம், வரலாறுகள் சான்று பகர்கின்றன. கடைசியில் கண்ட பலன் என்ன அழிவு அழிவு, மனித உயிர்களின் அழிவு, மனிதத்தின் சிதைவு. உயர்ந்த அறிவு கொண்ட மனிதன் மட்டும் தான் தன் இனம் அழிக்க கங்கணம் கட்டுகிறான், இங்கே மனிதன் மிருகமாகிறான் என்று சொல்ல முடியாது காரணம் மிருகங்களும் இதை செய்வதில்லை.

மிகப் பெரிய அறிவியல் மேதை ஒருவர் கூறுகிறார் விஞ்ஞான கணக்குப் படி உலகம் அழியும் சமயம் தொடங்கி விட்டது, உதாரணத்திற்கு உலகம் இரவு 12 மணிக்கு அழியுமானல் நாம் பகல் 8.30ல் இருக்கிறோம், நாம் வாழும் இந்த காலகட்டம் அற்புதமானது கற்காலத்தில் இருந்து ஏறிவந்த மனிதன் இன்று எல்லா வசதிகளுடன் வாழுகிறான், எவ்வாறு தன் வாழ்வுக்கு எல்லாவற்றையும் உண்டாக்கி வைத்திருக்கிறானோ அதே மனிதன் தன் வீழ்வுக்கும் எல்லவற்றையும் உண்டாக்கி வைத்திருக்கிறான் அதை எல்லாம் விட்டு விலகி அமைதியான வாழ்கைக்கு இந்த காலகட்டம் சிறந்தது என்று கூறுகிறார்;

உயிர் பலிகள் தடுக்கப் படவேண்டும், ராணுவ அத்துமீறல்கள் நிறுத்தப் படவேண்டும், அவரவர் மண் அவரவர்கட்கு விடப் படவேண்டும், மனித உரிமைகள் மதிக்கப் படவேண்டும், ஆயுத உற்பத்தி நிறுத்தப் படவேண்டும், ஆக்கப் பணிகளுக்கு செலவிட வேண்டும், தான் மட்டும் ஆயுதம் வைத்துக் கொள்ளலாம் அடுத்தவன் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற ஆதிக்க வெறி ஒழிக்கப் படவேண்டும், தன்னிடம் இருக்கும் ஆயுதத்தை அழிக்கும் வரை, அடுத்தவரிடம் இருக்கும் ஆயுதத்தை அழிக்கச் சொல்லும் தகுதி இழந்து விட்டோம் என்ற அறிவு வர வேண்டும், இதுவெல்லாம் நடக்க வேணடும் உலகம் ஆயுத பயமும் யுத்த பயமும் இன்றி செழிக்க வேண்டும், மண்ணைப் பற்றிய கவலை விட்டு விண்ணில் செய்யப் படும் செலவு நிறுத்தப் பட வேண்டும்.

உலகம் அமைதியாக, தன்னிறைவாக, மனிதன் மனிதனாக வாழ ஆணவம், ஆதிக்க மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும், எப்படி, எப்போது நடக்கும் ? என்றாவது நடக்கும் நம் சந்ததிகளாவது அதை அனுபவிக்க வேண்டும். இந்த கட்டுரையின் நோக்கம் இதைப் படிப்பவர் ஒரே ஒரு நிமிடம் மனதார உலக அமைதிக்காக பிரார்த்தித்தால் இந்த கட்டுரை அதன் பலனை அடைந்து விட்டது. எங்கும் பொங்கட்டும் அமைதி.
வாழ்க மனித நேயம், வீழ்க அராஜகம்.

வெள்ளி, அக்டோபர் 17, 2008

கலகம்

கலகம்

பெண்னே என்னை
கண்ணுக்குள் புகுந்து ஏன்
கலகம் செய்கிறாய்
என் இதயமென்னும்
நீரோடையில்
நித்தம் உன் குதியாட்டம்

கலங்கியது நீரோடை
மட்டுமல்ல
என் நெஞ்சமும் தான்
என் சிந்தனை எனும்
அமைதிப் பூங்காவில்
நித்தம் ஏன் சத்தம் செய்கிறாய்
சிதறியது என்
சிந்தனை மட்டுமல்ல
என் சித்தமும் தான்
உன் மென்மையான அந்த
சிரிப்பல்லவா என்னை
சிதிலமாக்கியது
உன் கண்ணுக்குள்
என்ன ஆயுதம்
சத்தமின்றி அதைக்கொண்டு
நீ யுத்தம் புரிகிறாய்
அணுகுண்டை விட
பலமான ஆயுதம்
அதனால் எனக்குள்
பலத்த சேதம்

பெண்ணே போதும்
என்னை விட்டு விடு
பாவம் நான்
நிராயுதபாணி.

புதன், அக்டோபர் 01, 2008

கடலம்மா எழுதுகிறேன்


கடலம்மா எழுதுகிறேன்

மரக்கலங்களைத் தூளியாக்கி
காற்று வெளியில் ஆட்டி மகிழ்;;த
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

மக்களைப் போல்
மடியில் வைத்து தாலட்டி வந்த
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

கடலோரம் கொஞ்சி விளையாடிய
பிஞ்சு குழந்தைகளை
அலையாலே மகிழ்வித்த
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

கரை வந்து இறங்கி
களைப்போடு உறங்கும்
உங்களை இரவு முழுதும்
அலையாலே குரலெழுப்பி
தாலட்டு பாடிய
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை

கடலம்மா கடலம்மா என்று
காலம் முழுதும் உறவாடிய
உங்களை என்றுமே
வெறுங்கையாக அனுப்பாத
நானா செய்வேன்
அந்த கொடுஞ் செயலை


வேதனையை சொல்லி
அழக் கூட ஆளில்லாத
அனாதையாகி விட்டேன்
இனி எல்லாரும் எனக்கு
500 மீட்டர் தூரமாம் காரணம்
எல்லோரையும் சுருட்டி விழுங்கிய
சுனாமியாம் நான்

அது இதயமில்லாதவர்கள் கூற்று
இதயத்தின் ஆழத்தில்
விழுந்த பலமான அடியை
இறுக்கி பிடித்து மெதுவாக விட்ட
மூச்சு காற்றிலேயே
முகவரி இழந்து விட்ட
மக்களுக்கு எப்படி சொல்வேன்
என் வேதனை

எய்தவனுருக்க அம்பென்ன செய்யும்
எங்கு சொல்வேன் என் சோகம்
அடி விழுந்த அதிர்ச்சியையே
தாங்க முடியா என் குழந்தைகள்
அடி எப்படி தாங்கும்

பண் பாடியே பார்த்த
என் முகத்தில் பயம் பார்த்த
பயத்திலேயே மாண்டு விட்டனர்
என் அன்பு குழந்தைகள்
இதோ அவர்கள் இறந்த பின்பும்
மடியில் வைத்து தாலட்டுகிறேன்
இறக்கி விட மனமில்லாமல்

பாவம் அந்த பாய்மர மக்கள்
ஒரு நாள் அறிவர்
இந்த அன்னையின் அன்பை
என்றும் அன்புடன் கடலம்மா.