திங்கள், அக்டோபர் 18, 2010

பிறவிப் பயன்




மனிதப் படைப்பு

உலகில் கோடானு கோடி ஜிவராசிகள் பிறக்கின்றன மரிக்கின்றன, அவைகள் தோன்றுவதும் மரிப்பதும் தானே அறியா ஒரு இயல்பு சுழற்சியாக இந்த உயிரின தோற்ற மறைவு பிரபஞ்சத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்ற ஒரு அற்புதப் படைப்பு எல்லா உயிரினங்களிலிருந்தும் வேறுபடுகிறது.

காடு, மலை, கிரகம் முதல் விண்ணில் மண்ணில் உள்ள அனைத்து உயிரிகளும் தோன்றுவதற்கு முன் எதுவாக இருந்ததோ அதுவாகவே தோன்றிய பின்னும் இருக்கிறது. அதன் உருவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம் ஆனால் அவற்றில் தனக்கென்று ‘சுயம்’ எதுவும் இருப்பதில்லை, உருவங்கள் வேறு வேறாக இருந்தாலும் அதன் உள்ளமை ஒன்றாகத்தான் இருக்கிறது மனிதன் உட்பட, ஆனால் மனிதனுக்கு தோற்றுவிக்கப் பட்ட ‘தான்’ என்ற மாய உணர்வு தன்னை தனியானவனாக உணரவைக்கிறது.

உண்மை நிலை

தன்னை மூலத்திலிருந்த பிரித்து உணர்வதே ‘தான்’ என்பது இதனையே அகங்காரம் என்கிறோம். இந்தப பிரபஞ்சத்தில் மனிதனையும், ஜின்னையும் தவிர வேறு எந்த படைப்பும் தன்னை பிரித்து உணர்வதில்லை. அதனால் மற்ற உயிரினங்கள் இறப்பைப் பற்றிய பயம், கவலைக் கொள்வதில்லை, எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பி செல்கிறது. அவைகள் எங்கிருந்து வந்தோம் என்பதையும் அறிவதில்லை எங்கே போகிறோம் என்பதையும் அறிவதில்லை. ஆனால் ‘தான்’ என்ற உணர்வில் வாழும் மனிதனுக்கு மட்டும் தான் மரண பயம், இறைவன் தன் வேதமான திருமறையில் கூறுகிறான் ‘என்னிலிருந்தே வெளியானிர்கள் என்னிடமே மீளுவிர்கள்’ இதை மனித மனம் ஏற்றுக் கொள்வதில்லை நாம் இங்கேயே இப்படியே இருந்து விட வேண்டும் என்று விரும்புகிறோம், இங்கே தான் நாம் இருப்போம், ஆனால் இந்த உருவத்திலேயே நிலைத்திருக்க விரும்புகிறோம்.

நாம் இந்த உருவத்தைக் கொண்டாடுகிறோம் வேறு யாருடையதும் அல்ல நம் உருவத்தையே நாம் கொண்டாடுகிறோம் இதுவே இத்தன கஷ்டத்திற்கும் காரணம். மரணம் என்பது இல்லாமல் போவது அல்ல, அது ஒரு நிலை மாற்றமே, பஞ்ச பூதங்களின் கூட்டாக இருந்த நாம் மீண்டும் பஞ்ச பூதங்களாகிவிடுவோம், இந்த பிரபஞ்சத்தில் எதுவும் கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை, எதுவும் நிரந்தரமும் அல்ல, மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

நோக்கம்

இதையெல்லாம் ஆய்ந்து உணரும் சக்தி மனிதனுக்கு மட்டும் படைக்கப் பட்டிருக்கிறது, இதற்காகவே தன்னைப் பிரித்துணரும் அந்த அகங்காரமும் படைக்கப் பட்டது. ஆனால் இயல்பு நிலை என்னவென்றால், பிறக்கிறோம்,வளர்கிறோம், பொருளீட்டுகிறோம், சந்ததி உண்டாக்குகிறோம், எத்தனை கஷ்டம் இந்த உலகில் பட்டாலும் சந்தோசமாக வாழ்வதாக நம்மை நாம் நம்பிக்கொள்கிறோம், வாழ்ந்தது போதும் என்று வாழ்வின் எந்தக் கட்டத்திலும் எண்ணுவதில்லை.
சரி மற்ற ஜீவராசிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவை அலங்காரத்திற்கு படைக்கப் பட்டவை, ஆனால் மனிதனின் தோற்றத்தின் அர்த்தம்? ஏன் பிறந்தோம்? நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை சிந்திக்கத் தான் மனிதனுக்கு ஆறாம் அறிவு. ஆனால் இந்த ஆறாம் அறிவை கடவுள் சண்டையில் தொலைத்துவிட்டு மொழியும் மிருகங்களாகிவிட்டோம், தன்னை அறிந்தவனே தன் கடவுளையும் அறிந்தான் அதுவே பிறவி எடுத்ததன் நோக்கம்.

6 கருத்துகள்:

மங்குனி அமைச்சர் சொன்னது…

good one

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

//தன்னை அறிந்தவனே தன் கடவுளையும் அறிந்தான் அதுவே பிறவி எடுத்ததன் நோக்கம்.//

சிந்திக்க வேண்டிய வரிகள்

Rajakamal சொன்னது…

கருத்துக்கு நன்றி திரு இஸ்மத், திரு மங்குனி அமைச்சர்

Rajakamal சொன்னது…

thanks

புல்லாங்குழல் சொன்னது…

உங்கள் இடுகை அற்புதமாக உள்ளது.
"நான் இறையல்ல
நான் இறையல்ல
என்றும் இறையை பிரிந்தவன்
நானல்ல"
என் குருவின், குருவின் குரு எழுதிய உருது கவிதையில் வரும் வரிகள்.
"இறைவனை நான் தேடிய ஒரு காலமும் உண்டு
இன்று என்னை நானும் தேடுகின்ற மாறுதல் உண்டு" இதுவும் ஒரு குருவின் கவிதை.
உங்கள் வரிகளை படிக்கும் போது கவிதை தெரிகின்றது. ஆன்மிக கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நூருல் அமின், ஆன்மீக கவிதை நிறைய எழுதி உள்ளேன் லேபிள் கொடுக்காததால் அறியமுடியாமல் போயிருக்கும், உங்கள் வலைப் பூவை நண்பர் அறிமுகப்படுத்தியிருந்தார் மிக அழகான ஆன்மிக கருத்துக்கள் மேலும் எழுதுங்கள் "அல்லாஹ் நாடியவருக்கே ஞானத்தைக் கொடுக்கிறான் அல்லாஹ் யாருக்கு ஞானத்தைக் கொடுத்துவிட்டானோ அவர் அனேக நன்மைகளைப் பெற்றுவிட்டார்" என்பது திருமறை வசனம்.