சனி, செப்டம்பர் 06, 2008

நீ எனக்கு தந்தது


கருணையுடன் என்னை நீ
கரு முட்டைக்குள் நுழைய வைத்தாய்
கரு பையாய் சூழ்ந்து என்னை
காத்து அருளினாய்

நான் சிதைந்து விடாமல் சீராக
என்னை வளர வைத்தாய்
சில மாதங்களில்
சேயாய் என்னை பரிணமிதாய்

கர்பத்தில் நான் இருந்த
காலமெல்லாம் களிப்புடனே
அதில் என்னை இருக்க வைத்தாய்
குழந்தையாய் பிறந்த பின் தான்
பாலுக்கு நான் அழுதேன்

கர்பத்தில் அழுகை என்றால்
என்ன வென்று நானறியேன்
அன்புக்கு முதலிடம் அன்னை என்பார்
அவள் கூட அழுதபின் தான்
பால் கொடுத்தாள்

என் உணர்வறிந்து உணவளித்த
உயர்ந்தவனே
உன் அன்புக்கு உவமானம்
என்ன சொல்வேன்

நான் ஆனந்த உலகத்தில்
மிதந்திருந்தேன்
சுடும் உலகத்தில் பிறந்தவுடன்
கதறி விட்டேன்

மனமிரங்கி அன்னையாய்
நீ எனக்கு ஆறுதல் தந்தாய்
என் மீது அன்பு வைத்தாய்

அங்கங்களை அழகாய் நீ
படைத்தது வைத்தாய்
அறிவு என்னும் அற்புதத்தை
பரிசளித்தாய்
நோய் நொடிகள் தாக்கிடமல்
காத்து வைத்தாய்
உயர் நெறி பயில நல்ல
அன்னை தந்தை எனக்களித்தாய்

நன்மை என்றும் தீமை என்றும்
பிரித்து வைத்தாய்
நன்மையே நாடும்
நல்ல மனம் தந்தாய்

அன்பு பாசம் இறக்கம் போன்ற
அழகான குணம் தந்தாய்
பொருளீட்டி வளம் சேர்க்க
உலக கல்வி தந்தாய்

நேர்வழியை நடப்பதற்கு
காட்டி தந்தாய்
அதிலேயே கைப்பிடித்து
அழைத்து சென்றாய்

தடுக்கப்பட்ட உணவுகளை
தடுத்து கொண்டாய்
தவறான உணர்வுகளை
பூட்டி வைத்தாய்

என்னை நீ பார்க்கிறாய்
என்ற உணர்வு தந்தாய்
தவறிழைத்தால் தண்டிப்பேன்
என்று சொல்லி வைத்தாய்

தக்க சமயத்தில் தாரத்தையும்
சேர்த்து வைத்தாய்
மனம் மகிழ மழலையும்
தந்து வைத்தாய்

தனிமையில் நானிருந்து
தளர்ந்த போது
தன் நம்பிக்கை தந்து நீ
நிறுத்தி வைத்தாய்

எனக்கு பயமான காலங்களில்
பலமாக நீ இருந்தாய்
இத்தனையும் தருகின்றாய்
எங்கே நீ இருக்கிறாய்

என்று நான் தேடிய போது
இங்கே நான் என்று உன்னை
எனக்கு நீ காட்டி தந்தாய்
உன்னை உணர்ந்து வணங்குகின்ற
உள்ளம் தந்தாய்
உயிர் தந்தாய்
உடல் தந்தாய்
உணவு தந்தாய்
உறைவிடம் தந்தாய்
மறை தந்தாய்
மார்க்கம் தந்தாய்
மா நபி தந்தாய்

தன் தாய் தன் தாய்
என்று உன்னை தாயக
கூறி வந்தேன்
நான் தாயினும் மேல் என்று
நிரூபித்தாய்

இன்னும் என் அறிவுக்கு எட்ட


எத்தனையோ தந்தாய்


ஆயுள் முழுக்க அமர்ந்து


இங்கு எழுதினாலும்


நீ செய்திட்ட பேரருள்கள்


தீர்ந்து விடா


தந்தாய்


தருகிறாய்


தருவாய்


என்று உன்னிடம் நான்


தேவை உடையவனாக


இருக்கிறேன்


அத்தனையும் தந்த உனக்கு


நான் என்ன செய்து விட்டேன்


ஒன்றுமில்லை ஒன்றுமில்லை


இத்தனையும் தந்த என் பேரிறைவ


உன் மன்னிப்பையும் தந்து என்னை


மகிழ்விப்பாய்.











1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

jazak`Allah
thanks for everyfhing